இரண்டாவது காலாண்டுக்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.06.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், முதலாம் காலாண்டுக்கான நிதி முன்னேற்றத்தினையும், இரண்டாவது காலாண்டுக்குரிய நிதி விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்வதுமே இக் கூட்டத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மேலும், நிதி முகாமைத்துவம், கட்டுப்பாடுகள் உரியவகையில் பின்பற்றப்பட வேண்டும் என்பதனையும் ஆராய்வது அவசியமானது எனக் குறிப்பிட்ட அரசாங்க அதிபர், உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பான கடமைகள் மூலம் வேலைத் திட்டங்களுக்கான நிதி முன்னேற்றங்களை முழுமையாக இவ்வாண்டு இறுதிக்குள் பூர்த்தி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும், பழைய பூங்காவில் சுற்றாடல் தினமான யூன் 05 இல் முதற்கட்டமாக 200 மரங்கள் நாட்டப்பட்டதனை குறிப்பிட்டு, ஒவ்வொரு உத்தியோகத்தர்களும் ஒவ்வொரு மரத்தினை பொறுப்பேற்று சீராக நீர் ஊற்றிவருவதனையும், சில உத்தியோகத்தர்கள் தமது பிள்ளைகளுடன் விடுமுறை நாட்களில் வந்து நீர் ஊற்றிச் செல்வதனையும் அவதானித்த போது அவர்களின் சமூகப் பொறுப்பினை உணரக்கூடியதாக இருப்பதாகவும், இதன் மூலம் தமது கடமைகளிலும் உத்தியோகத்தர்கள் வினைத்திறனாக செயற்படக்கூடியவர்கள் என்பது புலனாகுவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு க. ஸ்ரீமோகனன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க.திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கணக்காளர் திரு. நிர்மல், உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






