பிரதேச செயலாளர் திருமதி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், வடக்கு மகாண கல்வி அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பிரதிப்பணிப்பாளர் திருமதி லாகினி நிரூபராஷ் அவர்களும், கெளரவ விருந்தினராக யாழ்பாண பல்கலைக்கழக கல்வியற் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் இசை நாடக கலைஞருமான கலாநிதி வைத்தியலிங்கம் விஜயசங்கர் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
கலாபூஷணம் அமரா் சு.வரதராஜசர்மா அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆலய முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து (விழிசிட்டி சோலைக்குயில் அவைச்சகாற்றுக் களத்தினர் ), வரவேற்பு நடனம் (கலாசார மத்திய நிலைய குழுவினர்), மங்கல இசை (அளவெட்டி ந. உதயசங்கர் குழுவினர்), கிராமிய இசை கணேசா கலைமன்றம், பல்லிய இசை விருந்து, வீரபத்திர வசந்தன் கோலாட்டம் , இசை நாடகம் (அரிச்சந்திர மயான காண்டம்), என்பன சிறப்பாக நடைபெற்றது.
கலைஞர்களுக்கான " கலைச்சுடர் விருது" அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டதுடன், பிரதேச விருது வழங்கல் மற்றும் பிரதேச கலைமன்றங்களுக்கான கலை ஆக்கத்திறன் போட்டிகளின் பரிசில் வழங்கல் நிகழ்வும் இடமபெற்றது.
இந்நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.






