இந்தியத் துணைத் தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்றைய தினம் (09.09.2025) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.இக் கருத்தரங்கில் குழந்தைகளின் எதிர்காலம் வளமானதாக மாற்றுவதற்கான பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் கருத்தரங்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வட மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகன், இந்திய துணைத் தூதுவர் கெளரவ சாய் முரளி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்,இந்திய துணை தூதரகமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக சமூகத்திற்கு பல ஆரோக்கியமானசெயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், அதன் ஒரு அங்கமாக இந் நிகழ்வு நடைபெறுவதாகவும் அதற்காக தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும், குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் அவர்களின் எதிர்கால போக்கு தொடர்பாக எவ்வாறு செயற்பட வேண்டும் என்று வைத்திய கலாநிதி சரண்யா ஜெயக்குமார் அவர்கள் எடுத்துக் கூறினார் எனவும் சிறுவர்களோடு தொடர்பு கொள்வதற்கு குடும்ப உறவுகள் மற்றும் அது தொடர்பில் பணி புரியும் உத்தியோகத்தர்கள் அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் அதற்கு அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்து, சூழல் போக்கு மாற்றத்திற்கு ஏற்ப அவர்களை ஆற்றுப் படுத்த வேண்டிய தேவைப்பாடு காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் பல தொடர்ச்சியான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பாக அரசாங்கம் ஒரு குழந்தை கருவில் உருவாகியது முதல் முதியோர் ஆகும் வரை பல வழிமுறைகளில் உத்தியோகத்ர்களை நியமித்து அவர்களை வழிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இதில் ஆசிரியர்களின் பங்கும் காணப்படுவதாகவும் மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கடமை உணர்வு ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி முகிழ்நிலை ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.






