போக்குவரத்து தொடர்பான யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினதும், போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடனும் இன்றைய தினம் (18.09.2025) காலை 09.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றுகையில், கூட்டத்திற்கு வருகை தந்த போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்களையும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களையும், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்றதுடன், எமது மாவட்டத்தின் போக்குவரத்து தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கான கூட்டமாக இது அமையவுள்ளதாகவும், கடல் வழிப்போக்குவரத்து, தரைவழி போக்குவரத்து புகையிரத மற்றும் விமான போக்குவரத்து தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்யும் கலந்துரையாடலாக இது அமையவுள்ளதாகவும் இவை தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தமது தொடக்கவுரையில், யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்து துறையினை புனரமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்கள் இங்கு வருகை தந்து விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையுரையாற்றுகையில், எமது அரசாங்கத்தின் கொள்கைகளில் ஒன்றாக போக்குவரத்து துறையில் பாரிய அபிவிருத்தி மாற்றத்தை மேற்கொள்வதாகும், அதற்கிணங்க ஜனாதிபதி மற்றும் போகுக்குவரத்து துறை அமைச்சரின் நடவடிக்கையால் போக்குவரத்து துறை வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்கின்றது. அந்த வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாரியளவில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மந்த நிலையில் உள்ளதாகவும், ஒப்பீட்டளவில் யாழ் மாவட்டம் போக்குவரத்து துறையில் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் மாவட்டமாக உள்ளதாகவும் போக்குவரத்து துறையை இன்று இருக்கும் நிலையை விட தரமுயர்த்தவுள்ளதாகவும் இது தொடர்பில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் நிரோசன் ரட்ணாயக்க அவர்கள் உரையாற்றுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விசேட போக்குவரத்து ஒருங்கிணைப் குழுவை அமைத்துள்ளதாகவும் அதற்கு அமைய இன்று போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழுவை அமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் இந்த ஒருங்கிணைப்புக்குழு ஊடாக யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பில் 3 முறைமைகள் அமைக்கவுள்ளதாகவும் அதாவது பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் அரச அலுவலர்கள் அனைவரும் இந்த பிரிவின் உடாக தொடர்பு கொள்ள முடியும் என்றும்
இதன் முதலாவது முறைமையாக மேலதிக செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர் ஊடாக எம்மோடு தொடர்பை எற்படுத்த முடியும். இவர்கள் எமது அமைச்சின் கீழ் உள்ள 17 திணைக்களங்களை ஒருங்கிணைப்பார்கள். இதற்கு மேலாக 25 மாவட்டங்களில் அமைச்சு சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் அக்குழுவின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இரண்டாவது முறைமையில் யாழ் மாவட்ட போக்குவரத்து துறை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவு செய்யப்பட்டு இவருக்கூடாக உச்ச கட்ட சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மூன்றாவது முறைமையில் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் உள்ளிட்ட பிரதி அமைச்சர்கள் இருவர் உள்ளனர். இந்த மூன்று அமைச்சர்களுக்கும் ஒருங்கிணைப்பு செயலாளர்கள் 5 பேர் வீதம் 15 பேர் உள்ளனர். யாராக இருந்தாலும் அவர்களுடன் கடிதம் மூலமாக மட்டுமல்லாது நேரடியாகவும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள் துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் இக் கூட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள் குறித்தும் அதன் தேவைப்பாடுகள் குறித்தும், குறிகட்டுவான் ,நயினாதீவு புதிய பாதை சேவையை (Forry)ஆரம்பித்தல் தொடர்பாகவும் அதாவது நவம்பர் மாத ஆரம்பத்தில் இந்த சேவை ஆரம்பிக்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. வீதி சமிக்ஞைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது தேவையற்ற இடங்களின் வீதி சமிக்ஞைகள் பொருத்துவதற்கு அனுமதி இல்லை என்றும் வீதிச் சமிக்ஞைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளினால் ஆராயப்பட்ட பின்பே அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார். மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் சாரதி பயிற்சி நிலையங்களை மாதம் ஒருமுறையாவது கண்காணித்து தகுதியுள்ளவர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்க வேண்டும். இதற்கு மேலாக நீண்ட தூர பயண வாகனங்கள் இருக்கை பட்டி கட்டாயம் அணியப்பட்டிருக்க வேண்டும் என்று சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாடசாலை வாகன சாரதிகள், அலுவலக வாகன சாரதிகள் மற்றும் பேருந்து சாரதிகள் கட்டாயம் பொது போக்குவரத்து சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதுடன் இதனை இறுக்கமாக பின்பற்றுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புகையிரத சேவை பற்றாக்குறையாகவுள்ளதாகவும் புகையிரதங்களின் என்னிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டு பாதுகாப்பான புகையிரத கடவை பற்றியும் அது தொடர்பாகவும் இதேவேளை, யாழ். நகரத்திலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபையின் மத்திய பேருந்து நிலையம் தொடர்பாகவும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நகரின் நெருக்கடி காரணமாக இது அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டது. அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் பலாலி சிவில் விமான நிலையம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கௌரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி எம். தனுஜா, அமைச்சின் மேலதிக செயலாளர்கள் ,மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், முப்படைகளின் அதிகாரிகள் , திணைக்களத்தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






