வட மாகாண சுற்றுலா அபிவிருத்தி திட்டம் தயாரித்தல் தொடர்பாக கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான பயிற்சி பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் ( 12.12.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக, வடமாகாண சுற்றுலாப் பணியகம் மாகாணத்திற்கான சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தினை வவுனியாப் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றது இதனடிப்படையில் சுற்றுலாப் பணியகமும் தயாரிப்புக் குழுவும் மாவட்டம் தோறும் பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி அம் மாவட்டங்கள் தொடர்பான வளங்கள் சவால்கள் தொடர்பான உள்ளீடுகளைப் பெற்றுவருவதற்கு அமைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், யாழ் மாவட்டத்தினுடைய சுற்றுலாத்துறை பல்வேறுபட்ட சவால்களுக்கு மத்தியிலே அதனுடைய செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாகவும், அதன் அடிப்படையில், வட மாகாணத்திற்கான சுற்றுலா தொடர்பான அபிவிருத்தி திட்டம் ஒன்றினை தயாரிப்பதற்கு யாழ்ப்பாண மாவட்டம் மிக முக்கியமான சுற்றுலா மையமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், யாழ் மாவட்டத்தினுடைய சுற்றுலாவினை மேம்படுத்தும் வகையில் சிறந்த திட்டங்களை உருவாக்கி ஒழுங்குபடுத்தி, அதன் ஊடாக மாவட்டத்தினுடைய சுற்றுலாவினை மேம்படுத்துவதன் ஊடாக மக்களுடைய வாழ்க்கை தரத்தினையும், வாழ்வாதாரத்தினையும் அதிகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்தார். ஏனைய இடங்களில் இருந்து வருகின்றவர்களுக்கான ஒரு சிறப்பான ஒரு சுற்றுலா மையமாக யாழ் மாவட்டத்தினை மாற்றுவதற்கான ஒரு தந்திரோபாய திட்டத்தினை வகுக்கும் பயிற்சி பட்டறையாக இதனை பயன்படுத்த வேண்டும் எனவும், வட மாகாணத்திற்கான ஒரு சுற்றுலா அபிவிருத்தி திட்டத்தினை சிறந்த முறையில் உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
பயிற்சி பட்டறையின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், சுற்றுலாத்துறைக்கான 05 ஆண்டுத் திட்டங்கள் தயாரிக்கும் போது சமூகத்தின் பலதரப்பட்ட பங்குதாரர்கள் உள்ளடக்கி அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று தயாரிக்க வேண்டும் எனவும், இதன் மூலமே திட்டங்கள் வினைத்திறனாக அமையும் எனவும் தெரிவித்தார். மேலும் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்ட திட்டங்களை மாதிரித் திட்டங்களாக தயாரித்து, மீண்டும் பொருத்தமான பங்குதாரர்களுடன் சேர்ந்து ஆராய்ந்து இறுதி செய்வதே பொருத்தமாக அமையும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாநகர கெளரவ முதல்வர், வடக்கு மாகாண சுற்றுலா பணியத்தின் தலைவர் திரு.அ. பத்திநாதன், வவுனியா பல்கலைக்கழக விரிவுரையாளரா பேராசிரியர் திரு. நந்தகோபாலன் மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சம்மிக்க லியனகே, உள்ளூராட்சி சபைகளின் கெளரவ தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர். மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உதவி மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், வடமாகாண சுற்றுலா பணியத்தினுடைய பணிப்பாளர், ஏனைய திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபையினுடைய செயலாளர்கள், யாழ் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களுடைய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 45 6 8