சமூக சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி W.G.தர்ஷினி கருணாரத்ன அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (12.02.2026) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பான மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையுரையாற்றுகையில், கொழும்பிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தினை நடாத்தியமைக்கு நன்றி கூறியதுடன், திணைக்களம் சார்ந்து ஆளணி வளப்பற்றாக்குறையினை சுழற்சி முறையில் இடமாற்றங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதான் ஊடாக அனைத்து உத்தியோகத்தர்களும் பயனடைந்து கொள்ள முடியும் எனவும், மேலும் சமூக சேவைகள் பணியானது மிகவும் கடினமான வித்தியாசமான பணியாகும் எனவும் குறிப்பிட்டதுடன், சமூக சேவைகள் திணைக்களம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கூடுதலான கவனம் செலுத்திவருவதனையிட்டு அரசாங்க அதிபர் பராட்டினார். மேலும் திணைக்களங்களுடானான உறவுகளை மேலும் உத்தியோகத்தர்கள் பலப்படுத்திக்கொண்டு தங்களது பணிகளை தொடர வேண்டும் எனவும்,
பொதுமக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவைகளை வழங்க வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நடவடிக்கைகளில் வினைத்திறனாக செயற்பாட்டின் அவசியத்தினை எடுத்துக்கூறியதுடன், அவர்களின் வாழ்வாதார தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதுடன், அதுவே முதன்மையான பணியாகும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார். சமூக சேவைகள் திணைக்களத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான செயற்பாடுகள் மற்றும் முன்னேற்ற நிலைகளை மதிப்பீடு செய்து, சமூக சேவைகள் திணைக்களம் மூலம் செயற்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் நலப் பணிகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் குறித்தும், எதிர்கால செயற்பாடுகளை திட்டமிடும் நோக்கில் குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன.
சமூக சேவைகள் திணைக்களத்தின்யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் திரு. தி.உமாசங்கர் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் திரு. சி.மதீசன், ஆகியோர் தமது மாவட்டங்களுக்கான செயற்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கையினை முன்னளிக்கை செய்தனர். இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






