கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவிற்குப் பின்னரான கலந்துரையாடல்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (04.03.2026) பி. ப 03.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர் ஆயர் வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், வடமாகாண கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் புடிக்ஹ லியனகமகே ஆகியோர் பங்குபற்றினார்கள்.இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர்த்திருவிழா சிறப்பான முறையிலே பெப்ரவரி 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றது எனவும், கச்சதீவு திருவிழாவிற்கு எதிர்பார்த்த பக்தர்களின் எண்ணிக்கையினைவிட எதிர்பாராத விதமாக அதிகமாக காணப்பட்டதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டதாகவும், எனினும் திருவிழாவிற்கு செல்ல வருகை தந்த அனைத்து பக்தர்களையும் அங்கு சென்றடைய கூடிய சந்தர்ப்பம் அமைந்திருந்ததாகவும் தெரிவித்தார் மேலும், எமது ஒழுங்கமைப்பிற்கு ஒத்துழைப்பு நல்கிய நெடுந்தீவு மற்றும் வேலணை பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலான சகல திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், மேலும் கடற்போக்குவரத்து ஒழுங்குகளை சிறப்பாக ஏற்பாடு செய்த வடபிராந்திய கடற்படை தளபதி அவர்களுக்கும், கடற்படையினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் பக்த்தர்களுக்கான கடற்போக்குவரத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பினை வழங்கிய வடமாகாண கடற்படைத் தளபதி அரசாங்க அதிபராலும், மேலதிக அரசாங்க அதிபராலும்கெளரவிக்கப்பட்டார். மேலும், எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற ஒரு பின்தங்கிய தீவில், ஒரு பக்த்தர் ஏனும் தவறாமல் கச்சதீவு அழைத்து வந்து திருவிழாவில் பங்குபெற சிறப்பான ஏற்பாடுகளைச் செய்த அரசாங்க அதிபர் மற்றும் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி ஆகியோரையும் அவர்களின் உத்தியோகத்தர்களையும் பாராட்டுவதாக அருட்தந்தை அவர்களால் குறிப்பிடப்பட்டு, யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் சார்பில் அருட்தந்தை அவர்களால் நினைவுச் சின்னம் அரசாங்க அதிபருக்கும், வடமாகாண கடற்படைத் தளபதிக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே சிவகரன், , பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதேச செயலாளர்கள் (நெடுந்தீவு, வேலணை), கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12 13 14 15