மாவட்ட திட்டமிடல் உபகுழுக்கூட்டம் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (27.03.2026) பி. ப 02.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் மாவட்ட மட்டத்தில் சகல நிதி மூலங்களையும் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தப்படும், நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடைமுறைபடுத்தப்படும் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் விபரங்கள், வேலைத் திட்டங்கள் தொடர்பாக எழும் பல குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகும் தெரிவித்தார். மேலும், திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களைநிவர்த்தி செய்வதற்காக அதனை ஆழமாகவும், விரிவாகவும் கலந்துரையாட வேண்டிய தேவை காணப்படுவதாகவும், அதனை நோக்காக கொண்டு இக் கூட்டம் விசேடமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, இக் கூட்டம் ஆரோக்கியமாக நடைபெறவும் ஆலோசனைகளையும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறும் கெளரவ அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு பிரேரணைகளை சமர்ப்பிப்பதற்கு முன்னர் திட்டமிடல் உப குழுக்கூட்டத்தில் விடயங்களை பரிசீலித்து அது தொடர்பாக முழுமையாக ஆராய்வதனூடாக அக் கூட்டத்தில் விரிவாக ஆராய வேண்டிய தேவை காணப்படாது எனவும் இது முதலாவது திட்டமிடல் உப குழுக்கூட்டம் என்பதால் அடுத்த கூட்டத்தில் திட்டங்கள் தொடர்பான பிரேரணைகளை பரிசீலித்து தீர்மானங்களை எடுக்கும் கூட்டமாக முன்னெடுக்க முடியும் என தெரிவித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ திரு. எஸ் கபிலன் அவர்களால் திட்டமிடல் குழுவின் நோக்கங்கள் தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. இக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்களத்தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.






