வேல்ட் விஷன் லங்கா நிறுவனம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து நடாத்திய விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களை மகிழ்வூட்டும் வகையிலான பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு இன்றைய தினம் (09.04.2026) சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு சிறப்புற நடைபெற்றது. வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் சாவகச்சேரி மற்றும் சங்கானை பிரிவுகளுக்கான முகாமையாளர் திரு. ஆர்.அமிர்தநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் சிறப்பு விருந்தினர்களாக வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. A.U நிஷாந்தன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F.C சத்தியசோதி, சங்கானை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்ஷினி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், இன்றைய காலகட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் நிலைப்பாடுகள் முற்றிலும் மாற்றமடைந்துள்ளது எனவும், அதாவது இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான பிள்ளைகள் பாடசாலை செல்லாமல், வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி இருந்த நிலை இன்று முற்றிலும் மாற்றமடைந்து இவர்கள் சமூகத்தோடு இணைந்து சமூக மயமாக்கப்பட்டு பல்வேறு போட்டிகள் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து தமது திறமைகளை வெளிக்காட்டும் நிலைமை உருவாகியுள்ளது எனத் தெரிவித்தார்.
பிரதேச செயலகங்கள், பல்வேறு சமூகமட்ட அமைப்புகள் பல்வேறு பங்களிப்பை இதற்கு வழங்கி வருகின்றன எனவும், இந்த நிகழ்வில் சாவச்சேரி சங்கானை உட்பட மேலும் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து விசேட தேவையுடைய பிள்ளைகள் கலந்து கொண்டிருக்கின்றார்கள் எனவும், தேசிய ரீதியில் நடைபெறும் போட்டிகளிலும் எமது மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி எமது மாவட்ட பிள்ளைகள் பங்குபற்றி வெற்றியடைந்தும் உள்ளனர் எனவும், இவர்கள் இவ்வாறன போட்டிகளில் பங்கு பற்றுவதே முக்கியமாகக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். கடந்த வருடம் மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் எமது மாவட்ட சிறார்கள் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டனர் எனவும், இவ்வாறான போட்டிகளில் பங்குபற்றி தமது திறமைகளை வெளிப்படுத்துவது என்பது அப் பிள்ளைகளின் முயற்சியாகவே நாம் பார்க்கவேண்டும் எனவும், இவ்வாறான சமூக வலுவூட் டல் நிகழ்ச்சிகளை மேற்கொள்வது என்பது பெருமைக்குரிய விடயம் எனவும், இவ்வாறான வலுவூட்டல் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்கும் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்திற்கு அரசாங்க அதிபர் தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் கடந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் பிறந்த தினத்தை கொண்டாடிய விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளை உள்ளடக்கிய வகையில் அவர்களை மகிழ்வூட்டும் வகையில் கேக் வெட்டப்பட்டு அவர்களுக்கு ஊட்டிவிடப்பட்டு அவர்களது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, கலந்து கொண்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் தாமாக முன்வந்து பல்வேறு கலை நிகழ்வுகளை ஆற்றுகை செய்திருந்தனர்.
குறித்த நிகழ்வில் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் செயறிட்டங்கள் நடைபெறும் சங்கானை, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுகளுடன் பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 80 விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந் நிகழ்வில் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், பிரதேச செயலகங்களின் சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விசேட கல்வி அலகு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.






