தேசிய உற்பத்தி திறன் செயலகத்தால் நடாத்தப்பட்ட "மக்கள் மைய நிர்வாகம்" Citizen Mirror : Divisional Productivity Index - 1.0 போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் அகில இலங்கை ரீதியில் 340 பிரதேச செயலகங்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று அதற்கான சான்றிதழினை நேற்றைய தினம் (16.06.2026) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி. யசோதா உதயகுமார் அவர்களும், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சஞ்சீவ் சுதாசினி அவர்களும், நல்லூர் பிரதேச செயலகத்தின் சார்பில் பெற்றுக்கொண்டனர். இதனையொட்டி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (17.06.2026) நல்லூர் பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்து பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவரையும் வாழ்த்தி பாராட்டியதுடன், உத்தியோகத்தர்களுடன் மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இது அரச பொறிமுறையில் முன்னணி வகிக்கும் சேவை வழங்கல் வலையமைப்பு, பிரதேச செயலகங்களின் உற்பத்தித்திறனை அளவீடு செய்வதற்கும் , மதிப்பீடு செய்வதற்கும் "மக்கள் மைய நிர்வாகம்" (Citizen Mirror) பிரதேச உற்பத்தி்த்திறன் சுட்டெண் 1.0 தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டதன் பிரகாரம் நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, திட்டமிடல் பிரிவு, காணிப் பிரிவு, பதிவாளர் பிரிவு, வெளிக்களப் பிரிவு மற்றும் விசேட செயற்றிட்டம் எனும் ஏழு பிரிவு ரீதியான தரவுகளை உள்ளிட்டு அகில இலங்கை ரீதியில் 96.23% புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாவது நிலைக்கு நல்லூர் பிரதேச செயலகம் தரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






