யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில், வடக்கு மாகாண ஆளுநரும் ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான கெளரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (19.06.2026) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் அவர்களினால் இணைத் தலைமையுரையாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களினால் தலைமையுரையாற்றப்பட்டது.
கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் எடுத்த தீர்மானங்களுக்கு அமைய அதன் முன்னேற்ற நடவடிக்கைகளும் ஆராயப்பட்டன. மேலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம், நயினாதீவு மற்றும் நெடுந்தீவு குடிநீர் விநியோகம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை ஆளணிப் பற்றாக்குறை, வீடமைப்பு திட்டம், விடுவிக்கப்பட வேண்டிய காணி விடயம், அரச வேலை எதிர்பார்க்கும் சித்த மருத்துவர் சங்கத்தின் கோரிக்கை தொடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கெளரவ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கெளரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கெளரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கெளரவ வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்,
வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் கெளரவ சி.வி.கே சிவஞானம், கெளரவ பிரதி முதல்வர், கெளரவ நகர மற்றும் பிரதேச சபைகளின் கெளரவ தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வட மாகாண கடற்படைத் தளபதி, பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் அதிகாரிகள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14