பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரச மற்றும் தனியார் காணிகள் தொடர்பான முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் கடந்த 2026.06.24 அன்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. காணி விவகாரங்கள் தொடர்பாக முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் தொடர்ச்சியாக அமைந்த இந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கெளரவ மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வள அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் கெளரவ அனுர கருணாதிலகமற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் கெளரவ ஜனித ருவன் கொடிதுவக்கு ஆகியோர் இணைந்து தலைமை தாங்கினர்.
காணி உரிமை குறித்த மக்களின் குறைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்க முயற்சிகளை விரைவுபடுத்துதல், சமூக-பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவித்தல் மற்றும் பிராந்திய நிர்வாக அமைப்புகளுடன் இணைந்து உட்கட்டமைப்பு அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லுதல் குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. இந் நடவடிக்கைகள் தேசிய நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற செயற்பாடுகளின் முக்கிய அங்கங்களாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக எல்லை மறுசீரமைப்புகளை இறுதி செய்வது, இழப்பீட்டு வழங்கல் நடைமுறைகளை விரைவுபடுத்துவது மற்றும் எதிர்காலத்தில் உரிய உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட வேண்டிய காணிகளை முன்னுரிமைப்படுத்துவது ஆகிய விடயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இக் கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அவர்கள், கடந்த மாதம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பல பகுதிகளுக்கு மேற்கொண்ட களப் பயணத்தின் போது பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள காணிகள் தொடர்பாகப் பெற்ற அனுபவங்களையும் அவதானிப்புகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும், தொடர்புடைய அரச நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் காணி மீளளிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான நடைமுறை வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இறுதியில் உரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாக, தேசிய பாதுகாப்பு சபையில் கலந்துரையாடுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவ மற்றும் விமானப்படைத் தளபதிகள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர்,பாதுகாப்பு அமைச்சின் மூத்த அதிகாரிகள், இராணுவ மற்றும் விமானப்படை உயரதிகாரிகள் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
1 2 3 5 7 8