யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.07.2026) முற்பகல் 11.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் திண்மக் கழிவு அகற்றல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் தொடர்ச்சியாக கலந்துரையாடப்பட்டு வருகின்ற போதிலும், அவை கலந்துரையாடல்களுடன் மட்டுப்படுத்தப்படாமல் நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றப்பட வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.
மேலும், சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புக்களை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும், உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் தமது அதிகார வரம்பிற்குட்பட்ட விடயங்களை மேலும் சிறப்பாக முன்னேடுத்தால் பொதுமக்கள் எவ்வித இடையூறுகளுமின்றி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார். திண்மக் கழிவு அகற்றல், ஒலிபெருக்கி பாவனை உள்ளிட்ட சுற்றாடல் சார்ந்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு காணப்படுகின்ற போதிலும், சிலர் விதிமுறைகளை மீறி இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார். சுற்றாடல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக செயற்பட்டு வரும் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அவர் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பின்வரும் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1.திண்மக் கழிவு முகாமைத்துவம் :
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளில் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான காணித் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதற்குத் தீர்வாக, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் சேகரிக்கப்படும் கழிவுகளை அந்தந்த பிரதேசங்களிலேயே முறையாக முகாமைத்துவம் செய்வது பொருத்தமானது எனத் தீர்மானிக்கப்பட்டது.
2.சட்டவிரோத எரியூட்டல் நடவடிக்கைகள் :
வீடுகள், வீதிகள் மற்றும் திறந்த வெளிகளில் கழிவுகளை எரியூட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றால், பொலிஸாரினால் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
3.ஒலிபெருக்கி பாவனை தொடர்பான கட்டுப்பாடுகள் :
ஒலிபெருக்கி பாவனையினால் பொதுமக்களுக்கு அதிக இடையூறுகள் ஏற்படுமாயின், கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டு, பொலிஸ் அதிகாரிகளின் உதவியுடன் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது. மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை நிறைவடையும் வரை ஒலிபெருக்கி பாவனைக்கான அனுமதிகள் வழங்கப்படமாட்டாது என நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
4.மரணச் சடங்குகளில் வெடிகொழுத்தல் :
மரணச் சடங்குகளின் போது வெடிகொழுத்தல் மேற்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
5.டெங்கு கட்டுப்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் :
டெங்கு நோய்த் தாக்கம் தொடர்பில் ஜூன் மாதத்தில் 79 பேரும், ஜூலை மாதத்தில் 162 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மூன்று நாள் விசேட விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலம் தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டதுடன், தொடர்ச்சியான கண்காணிப்புகளை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
உள்ளூராட்சி நிறுவனங்கள் திண்மக் கழிவுகளை அகற்றும் போது, கழிவு சேகரிப்பு கொள்கலன்களை முறையாக அமைப்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், பிரதேச செயலாளர்கள் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக சபைகளுடன் கலந்துரையாடி, பொதுச் சுகாதார பரிசோதகர்களின் உதவியுடன் திண்மக் கழிவு முகாமைத்துவம், டெங்கு கட்டுப்பாடு மற்றும் ஒலிபெருக்கி பாவனை தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
6.மணல் அகழ்வு தொடர்பான விடயம் :
மணல் அகழ்வு தொடர்பில் மன்னார் மாவட்டத்தில் இருந்து கோரிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், வீட்டுத் திட்டங்களுக்கான மணலைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதிகளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபை தவிசாளர்கள், செயலாளர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், யாழ்ப்பாண பொலிஸ் பொறுப்பதிகாரி, பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5