இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.07.2026) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில், நடைபெற்றது. இந்நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். மேலும், வடமாகாண கல்வித் திணைக்கள மாகாணப் பிரதிப் பணிப்பாளர் திரு. சுபாகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அத்துடன், யாழ் பிராந்திய லயன் கழகத்தின் லயன். செ. சிவலிங்கம், யாழ்ப்பாணம் லயன் கழகத்தின் லயன். க. கபிலேந்திரன், கற்றலிஸ்ற் லயன் கழகத்தின் லயன். அனிற்றா ரவிசங்கர் மற்றும் பிரதம பதிப்பாசிரியர் லயன் கழகங்களின் லயன். சி. பூபதி அம்மாள் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், பாதுகாப்பு சபையின் புலமைப்பரிசில் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்களை வரவேற்றார். மேலும், இலங்கை சமூக பாதுகாப்பு சபை தொடர்ச்சியாக மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வுகளை முன்னெடுத்து வருவதுடன், அதற்கு அப்பாற்பட்டு சிறுவர்களைச் சேமிப்புப் பழக்கத்திற்கு ஊக்குவித்து, அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தையும் நடைமுறைப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
இத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக பாதுகாப்பு சபையின் இணைப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்கள் இணைந்து தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், தேசிய மற்றும் மாவட்ட மட்டங்களில் அதிகளவில் சேமிப்பை ஊக்குவிக்கும் பிரதேச செயலகங்களையும் மாவட்டங்களையும் கௌரவிக்கும் செயற்பாட்டை இலங்கை சமூக பாதுகாப்பு நாடாத்திவருவதாகவும், தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக யாழ்ப்பாணம் மாவட்டம் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுவருவதனை பெருமையுடன் தெரிவித்தார்.
மேலும், குறைந்த வயதிலேயே பிள்ளைகளை இத்திட்டத்தில் இணைப்பதன் மூலம் அவர்கள் அறுபது வயதை அடையும் போது இயல்பாகவே ஓய்வூதியப் பயனைப் பெறக்கூடிய வாய்ப்பு உருவாகின்றது என்றார். அரச சேவையில் பலர் விரும்பும் முக்கிய அம்சங்களில் தொழில் பாதுகாப்பும் ஓய்வூதிய வசதியும் அடங்கும். ஆனால், அரச சேவையில் இணைந்திருக்காவிட்டாலும், இத்திட்டத்தின் மூலம் பிள்ளைகள் எதிர்காலத்தில் ஓய்வூதியப் பாதுகாப்பைப் பெற முடியும் என்பதால், இது மிகவும் பயனுள்ள திட்டமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், பெற்றோர்கள் தங்களது எதிர்கால பிள்ளைகள் நலனைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தில் இணைத்திருப்பது அவர்களின் அன்பையும் தொலைநோக்குப் பார்வையையும் வெளிப்படுத்துவதாகும் தெரிவித்தார். எனவே, மாணவர்கள் கல்விக் காலத்தை முழுமையாகப் பயன்படுத்தி அறிவை வளர்த்துக் கொண்டு, உயர்ந்த பொறுப்புகளையும் பதவிகளையும் அடைய முயற்சிக்க வேண்டும் என்றும், தங்களது பெற்றோரின் தியாகத்தையும் பெருந்தன்மையையும் என்றும் மதித்து வாழ வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, வடமாகாண சமூக பாதுகாப்புச் சபையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு. பா. பிரதீபன் அவர்கள் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விளக்கவுரையை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் திரு. எஸ். கபிலன் அவர்கள் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கௌரவ விருந்தினர்கள், சிறப்பு விருந்தினர் மற்றும் பிரதம விருந்தினர் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன. இந் நிகழ்வின் முக்கிய அம்சமாக, தகுதி பெற்ற 221 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. இதில் 8 மாணவர்களுக்கு ரூபா 50000.00 வீதமும், 15 மாணவர்களுக்கு ரூபா 25000.00 வீதமும், உள்ளடங்கலாக இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் புலமைப் புலமைப் பரிசில்கள் வழ ங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக, அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி. ஜே. விவேகா அவர்கள் நன்றியுரையாற்றியதுடன் நிகழ்வு நிறைவுற்றது. இந் நிகழ்வில் திட்மிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர் கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பெருமளவில் கலந்துகொண்டார் கள்.







