ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின்(NAHTTF) ஏற்பாட்டில், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு இன்று (11.08.2026) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின்(NAHTTF) பணிக்குழுவின் செயலாளரும், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளருமான சட்டத்தரணி திருமதி பிரியங்கனி ஹேவரத்ன, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின்(UNODC) தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி அனோஜா முனசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் இக்கருத்தரங்கு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் செயற்பாடுகளை வலுப்படுத்துவதுடன், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை மாவட்ட மட்டத்தில் ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ் விழிப்புணர்வின் ஆரம்ப நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மனித வியாபாரம் மற்றும் மனிதக் கடத்தலைத் தடுப்பதற்காக தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மாவட்ட மற்றும் பிரதேச செயலக மட்டங்களுக்கும் கொண்டு சென்று, பொதுமக்களுக்கு விரிவான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். மனிதக் கடத்தல் (Human Smuggling) மற்றும் மனித வியாபாரம் (Human Trafficking) ஆகிய இரண்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் தெரிவித்தார். ஒருவரை சட்டவிரோதமான முறையில் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அழைத்துச் செல்வது மனிதக் கடத்தலாகக் கருதப்படலாம். அதேவேளை, ஒருவரை ஏமாற்றுதல், தவறான வாக்குறுதிகளை வழங்குதல் அல்லது பொருளாதாரத் தேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு அழைத்துச் சென்று சுரண்டுவது மனித வியாபாரத்தின் முக்கிய வடிவங்களில் ஒன்றாகும் எனத் தெரிவித்தார். பெண்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி அழைத்துச் சென்று தவறாக பயன்படுத்துதல், உரிய ஊதியம் வழங்காமல் சுரண்டுதல், குறைந்த ஊதியத்தில் பணியாற்றச் செய்தல், சிறுவர்களை வேலைவாய்ப்பில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் மனித வியாபாரத்தின் கீழ் இடம்பெறக்கூடியவையாகும் எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்கள் இவ்வாறான சுரண்டல்களுக்கு அதிகளவில் ஆளாகக்கூடிய நிலை காணப்படுவதாகவும், கல்வியறிவு பெற்றவர்களும் வெளிநாட்டு மோகத்தால் வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு மோசடிகளுக்கும் சுரண்டல்களுக்கும் உள்ளாகி முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால், வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் மக்களுக்கு உரிய வழிகாட்டல்களையும் தேவையான விழிப்புணர்வையும் வழங்குவதில் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகங்களின் ஊடாக பொதுமக்களுடன் நேரடியாகப் பணியாற்றும் உத்தியோகத்தர்களை பயன்படுத்தி, மனித வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வை சமூகத்தின் கீழ்மட்டம் வரை கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு உத்தியோகத்தர்கள், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் உளவளத்துணை ஆலோசனை உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஊடாக ஆபத்துக்குள்ளாகக்கூடிய குடும்பங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் ஆதரவையும் வழங்க வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மக்களை முதலில் அடையாளம் கண்டு, அவர்களின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை பிரதேச செயலாளர் மட்டத்தில் முன்னெடுப்பதன் மூலம் மனித வியாபாரம் மற்றும் பல்வேறு சுரண்டல்களுக்கு அவர்கள் ஆளாகும் நிலையை குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி பிரியங்கினி மற்றும் திருமதி அனோஜா முனசிங்க ஆகியோருக்கு நன்றி தெரிவித்த அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் மனித வியாபாரத்தைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்த அனைவரினதும் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இதன்போது, மனிதக் கடத்தல் தொடர்பான அறிமுகம், சர்வதேச மற்றும் தேசிய சட்ட ஏற்பாடுகள், மனிதக் கடத்தலுக்கும் புலம்பெயர்வோர் கடத்தலுக்கும் இடையிலான வேறுபாடுகள், மனிதக் கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் முறைகள், முறைப்பாடு மற்றும் அறிக்கையிடல் பொறிமுறைகள், மனிதக் கடத்தல் குற்றங்கள் தொடர்பான சட்ட நடைமுறைகள், ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணி(NAHTTF) பணிக்குழுவின் பொறுப்புகள் மற்றும் செயற்பாடுகள் ஆகியன தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன. இப்பயிற்சிப் பட்டறையில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்களின் நிர்வாக கிராம அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12