நல்லூர் பிரதேச செயலகமும் நல்லூர் கலாசார பேரவையும் இணைந்து, பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்த “பண்பாட்டு – 2026” விழா 14.08.2026 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்விற்கு நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார் தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் கலந்து கொண்டதுடன், கௌரவ விருந்தினர்களாக யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் (பதில்) திருமதி கி. மாலினி மற்றும் பிரபல வர்த்தகப் பிரமுகரும் “கல்விக் காருண்யன்” திரு. ஈ.எஸ்.பி. நாகரத்தினம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம் மற்றும் மரபுக் கலைகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்காலத் தலைமுறையினரிடையே கொண்டு செல்லும் நோக்கில் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டது. நாடகக் கலைஞர் அமரர் சிவகுமாரன் அவர்களை நினைவுகூரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட “சிவகுமாரன் அரங்கு” நிகழ்வு, பாரம்பரிய கலை, இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக நல்லூர் சட்டநாதர் ஆலய முன்றலில் இருந்து பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன், மங்கல விளக்கேற்றல் நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து நல்லூர் கீதவாணி இசைக்கல்லூரி மாணவர்களின் பங்கேற்புடன் தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து மங்கல இசை மற்றும் ஆசியுரை நிகழ்வுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. சு. நிமலன் அவர்களின் அரங்கத்திறப்புரை இடம்பெற்றது.
தொடர்ந்து நல்லைக் கலாமன்ற நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனம் சிறப்பாக இடம்பெற்றது. இதனையடுத்து ஹிரிமையா நடனக்கல்லூரி மாணவர்களின் கும்மி நடனம், இளங்கலைஞர் மன்றத்தின் நாட்டிய அர்ப்பணம் மற்றும் ஜெயந்தி அபிநயஜோதித்ரா குழுவினரின் காவடிச்சிந்து ஆகிய கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. மேலும், கலைமன்றங்களுக்கிடையிலான பிரதேச மட்டப் போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தலைப்பிலான சிறப்பு நடன நிகழ்வு நர்த்தனவேதித்திரா குழுவினரால் வழங்கப்பட்டது. தொடர்ந்து கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் “கலைஞானச்சுடர்” மற்றும் “இளங்கலைஞர்” விருதுகள் வழங்கப்பட்டன. பத்மராகம் இசைக் கல்லூரியினரால் வேணுகான இசை நிகழ்வும் வழங்கப்பட்டது. நிகழ்வின் நிறைவாக நல்லூர் கீதவாணி இசைக்கல்லூரி மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து இடம்பெற்று, “சிவகுமாரன் அரங்கு” நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது. நிகழ்வில் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
 
1 2 3 4 5 6 8 12 14 15 16