யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (18.08.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது, மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் பெளதீக மற்றும் நிதி முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு அபிவிருத்திப் பணிகளுக்காக 3,900 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர், குறித்த நிதியின் மூலம் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்து திணைக்களங்களினதும் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, குறித்த அபிவிருத்தித் திட்டங்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில், பிரதேச சபைகள் மற்றும் மத்திய, மாகாண அமைச்சுகளின் ஒருங்கிணைந்த செயற்பாடும் அவசியமானது எனவும் தெரிவித்தார். அத்துடன், இதுவரை மாவட்டத்தில் அபிவிருத்திப் பணிகளைச் சிறப்பாக முன்னெடுப்பதற்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அரசாங்க அதிபர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். தொழில்நுட்பம், ஆளணி மற்றும் திணைக்களங்களின் கொள்ளளவு உள்ளிட்ட பல்வேறு சவால்கள் காணப்பட்டபோதிலும், அனைத்து திணைக்களங்களும் ஒருங்கிணைந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், பிரதேச செயலக மட்டத்தில் காணப்படும் சில திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டம், சமூக சக்தி திட்டம், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீடமைப்புத் திட்டங்கள், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சின் வேலைத்திட்டங்கள், சமுர்த்தி வேலைத் திட்டங்கள் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது, நிறைவடைந்த திட்டங்கள், நிறைவடையாத திட்டங்கள் மற்றும் அவற்றை நிறைவு செய்வதில் காணப்படும் நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் ஆராய்ந்த அரசாங்க அதிபர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார். இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், உதவி கமநல சேவைகள் ஆணையாளர், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் பிரதி/உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 87 10 11 14 20