யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (01.09.2026) காலை 9.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, அலுவலகக் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் 30.08.2026 அன்று உடுவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மின்சார விபத்தில் உயிரிழந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் அமரர் சிந்துப்பிரியா நிசாந்தன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் வகையில், அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இவ்வாண்டிற்கான மூன்றாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவக் குழுக் கூட்டமாக இது அமைந்துள்ளதுடன், முதலாம் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகள் மற்றும் அவற்றின் முடிவுகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், அலுவலக நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுவதுடன், உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் ஆவணங்களை முழுமையாக வாசித்து, அவற்றின் உள்ளடக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயற்படுமாறும் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார். அத்துடன், பதிவேடுகளை (Records) முறையாகவும் தொடர்ச்சியாகவும் பராமரிப்பதன் மூலம் எதிர்காலத் தேவைகளை உரிய முறையில் பூர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்ததுடன், தமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளைத் துரிதமாகவும், வினைத்திறனுடனும், சரியான முறையிலும் நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் திரு. பிரபாகரன், உதவி கணக்காய்வு அத்தியட்சகர் திரு. H. M. U. K. குமார் மற்றும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு. எஸ். ரமேஷ்குமார் ஆகியோர் நேரடியாகக் கலந்து கொண்டதுடன்,
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் செல்வி. பொன்ராணி மற்றும் சிரேஷ்ட உதவி கணக்காய்வாளர் திரு. ஜெறோஸ் ஆகியோர் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காய்வு முகாமைத்துவம் தொடர்பான பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும், இக் கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன், பிரதம பொறியியலாளர் திரு. க. திருக்குமார், திட்டமிடல் பணிப்பாளர் திரு. இசுரேந்திரநாதன் உள்ளிட்ட மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள் மற்றும் விடய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






