"சவால்களினை முறியடிக்கும் வளமான நாளை" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக சுதந்திர தின நிகழ்வு 04.02.2022 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் காலை 8.19 மணிக்கு தேசிய கீதத்தோடு தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சர்வமதத்தலைவர்களின் ஆசிகளுடன் சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் "நாட்டிற்கு சுதந்திர தினத்தினை பெற்றுத்தருவதற்கு பாடுபட்ட தேசியவீரர்கள் இன,மத,மொழி பேதம் பாராது அனைவரும் ஒன்றினைந்து பெற்றுத்தந்தார்கள். தற்போதும் அதே ஒற்றுமையினை வலியுறுத்தி இன,மத,மொழி பேதமின்றி சுபீட்சமான வாழ்க்கையினை வாழ நாம் உறுதிகொள்வோம் எனவும் இந்த சுதந்திர தின விழாவின் தொனிப்பொருளாக "சவால்களினை முறியடிக்கும் வளமான நாளை" என்பது ஆகும். எனவே சுதந்திரத்தை சமமாகவும், ஒன்றாகவும் அனுபவிக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், கோவிட் பெருந்தொற்று நிலைமைகள் எமக்கு பலவிதமான சவால்களினை ஏற்படுத்தியுள்ள போதும் இவ்வாறன இயற்கை பேரிடர்களை எல்லாம் எதிர்கொண்டு இத்தகைய சுதந்திர தினத்தை நாம் அனுபவிக்க வேண்டும். மேலும், எதிர்வரும் வருடம் கொண்டாடப்படவுள்ள 75வது சுதந்திர தினத்தை அரசாங்கம் " ஆளுக்கொரு மரக்கன்று " எனும் தொனிப்பொருளில் "பசுமையான இலங்கை நோக்கி" என்ற திட்டத்தை ஆரம்பித்து கொண்டாடப்படவுள்ளதால், மாவட்ட செயலக வளாகத்தில் இன்று மரக்கன்றுகள் நாட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது ஆகும்.
இச் சுதந்திர தின நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்






