யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் பயன்பாட்டுக்குரிய மக்கள் மயப்படுத்தப்பட்ட சவுக்கு மரக்காடாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டதுடன், மக்களினால் அமைக்கப்பட்ட குறித்த மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் மயப்படுத்தப்பட்ட வனவள கிராமமாக பிரகடனம் செய்வதன் மூலம், சவுக்கு மரக்காட்டினை மக்கள் பராமரிக்கமுடிவதுடன் மக்கள் தமது வாழ்வாதார செயற்பாடுகளையும் மேற்கொள்ள கூடியதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. மேலும்,மணல் அகழ்வு இடம்பெறாத வகையில் மக்கள் இக்காட்டினை பராமரிக்க வேண்டியதும் பாதுகாக்க வேண்டியதும் அவசியம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் கௌரவ கே.என். டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்,வட மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு. எஸ்.முரளிதரன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்






