யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திற்கு வந்த பேரணியினருக்கு மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் கருத்துத் தெரிவிக்கும் போது " சைகை மொழி பேசுவோரை கௌரவித்து அவர்களுக்குரிய தேவைகளை நிறைவேற்றவேண்டியது அனைவரதும் பொறுப்பாகும். அத்துடன் தேசிய, மாவட்ட மட்டங்களில் இன்று சைகை மொழிக்குரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. குறிப்பாக இம் மொழி பல்வேறு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து கொள்கிறார்கள். அத்தோடு சைகை மொழியை சர்வதேச மொழியாக ஏற்றுக்கொள்ளும் பிரகடனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 500 ற்கும் மேற்பட்ட சைகை மொழி பேசுபவர்கள் உள்ளனர். அவர்களுடைய சங்கங்கள் பல்வேறு தேவைகளை குறிப்பிட்டுள்ளார்கள். அத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட மற்றும் பிரதேச செயலக ரீதியில் ஒன்றிணைந்து செயற்படுகிறோம் எனவும் தெரிவித்தார்






