யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாவட்ட பண்பாட்டு விழா நிகழ்வானது மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவை தலைவருமான திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (21.10.2022) சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.இ.வரதீஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக சாகித்திய ரத்னா திரு. ஐ. சாந்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர்களின் மங்கள வாத்தியங்களுடன் யாழ். நாச்சிமார் ஆலயத்திலிருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.இதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றலுடன், தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்து தமிழ் தாய் வணக்கம் இசைக்கப்பட்டது.மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையால் "யாழ்ப்பாணம்" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மூத்த கலைஞர்களுக்கு "யாழ் முத்து"விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.அத்தோடு, யாழ்ப்பாண மாவட்ட இளங்கலைஞர்களும் விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும், இந் நிகழ்வில் நல்லூர் நர்த்தனஷேத்திரா மற்றும் இணுவில் குமர நர்த்தனாலயம் மாணவர்களினால் நடனம் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந் நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.முரளிதரன் (காணி), யாழ்ப்பாண பண்பாட்டு பேரவையின் உப செயலாளர் கவிஞர் திரு.சோ.பத்மநாதன், யாழ்.பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஷ்ட பேராசிரியர் திரு.எஸ்.சிவலிங்கராஜா மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையினர், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

21cul1 21cul2 21cul3

21cul4 21cul5