தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையினால் நடாத்தப்படும் மாவட்ட தொழில் முயற்சி மன்றம் அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் தலைமையில் இன்று (29.11.2022) மு.ப 9.00 மணிக்கு மாவட்டசெயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி செ.நிக்கொலஸ்பிள்ளை, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு இ.சுரேந்திரநாதன், தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் வடமாகாண இணைப்பாளர் திரு க.ரவிக்குமார், மாவட்ட செயலக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட செயலக மற்றும் பிரதேசசெயலகங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வங்கி முகாமையாளர்கள், கைத்தொழில் சார் நிறுவனங்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கிவருகின்ற தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகார சபையானது சிறிய நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளையும் பயிற்சிகளையும் வழங்கி வருகின்றது. இவ் நிகழ்ச்சித்திட்டத்திற்கமைவாக யாழ்.மாவட்ட தொழில் முயற்சியாளர்கள் தொழில்முயற்சியை முன்னெடுப்பதில் எதிர்நோக்கும் தொழில் ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பாக உரிய நிறுவனங்களின் பங்குபற்றுதலின் ஊடாக தகுந்த ஆலோசனைகள் வழிகாட்டல்கள் வழங்கியதன் மூலம் அவர்கள் தங்களது தொழில் முயற்சியை இலகுவான முறையில் முன்னெடுக்கக்கூடிய வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.







