பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டு குழு கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் பெண்கள் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் பெண்கள் எதிர்நோக்கும் பால்நிலை சார் வன்முறைகளுக்கு எதிராக செயற்படுத்தும் வேலை திட்டங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன
குறிப்பாக பிரதேச செயலகங்களிலிருந்து பெண்கள் அபிவிருத்தி பிரிவினரால் கடந்த நான்கு ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள், அதிகளவு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற இடங்கள் , நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வுகள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் பேசும் பெண் பொலீஸ் அலுவலர்களது தேவைப்பாடுகள்,SGBV சார் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டு செல்வதில் எதிர்நோக்கும் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் பால்நிலை சார் வன்முறைக்கு எதிரான முற்காப்பு நடவடிக்கைககள் தொடர்பான விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்,உளவளத்துணை இணைப்பாளர், பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் ,சமூக மேம்பாட்டு இணைப்பாளர், சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் ,சிறுவர் உரிமை மேம்பாட்டு இணைப்பாளர் ,பொலிஸ் நிலைய பிரதிநிதிகள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.






