வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர்திருவிழா தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (23.01.2024) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் எதிர்வரும் மாசி மாதம் 23, 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள திருவிழா தொடர்பாக ஆராயப்பட்டதுடன், இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை, அவர்களுக்கான தங்குமிட வசதிகள், கூடாரங்கள், உணவு வசதிகள், பாதுகாப்பு, சுகாதாரத் தேவைகள், மலசல கூட வசதிகள், குடிநீர் தேவைகள், பொலிஸ் பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஒலி, ஒளி வசதிகள், அலங்காரங்கள், கடல் மற்றும் தரைப் போக்குவரத்து ஒழுங்குகள், விருந்தினர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
மேலும் கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழாவுக்கு இலங்கை கடற்படையின் ஒத்துழைப்பு பிரதானமானதெனவும், இத் திருவிழாவுக்கு சிறப்புற நடைபெற அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்குதல் வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்போது வணக்கத்துக்குரிய அருட்தந்தை P.J. ஜெபரட்ணம், இந்திய தூதுவர் ராம் மகேஸ், இந்திய துணைத் தூதுவர் நாகராஜன் இராமசுவாமி மற்றும் வட மாகாண கடற்படை கட்டளை தளபதி, மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திணைக்கள தலைவர்கள், யாழ் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட செயலக பிரதம கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள்(நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்துறை), முப்படையினர்கள், துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








