வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையும், யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்ட பண்பாட்டு விழா நிகழ்வானது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (30.01.2024) பிற்பகல் 2 மணிக்கு சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி.பீ.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும், சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை தலைவர் திரு.கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறுதிருமுருகன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி.லாகினி நிருபராஜ் மற்றும் சாகித்ய ரத்னா திரு.கனகரத்தினம் சட்டநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர்களின் மங்கள வாத்தியங்களுடன் யாழ். நாச்சிமார் ஆலயத்திலிருந்து நிகழ்வு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றலுடன், தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்து தமிழ் தாய் வணக்கம் இசைக்கப்பட்டது.
மேலும், இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையால் "யாழ்ப்பாணம் 02" எனும் நூல் வெளியீடு இடம்பெற்றது.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்ட மூத்த கலைஞர்களுக்கு "யாழ் முத்து"விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்தோடு, யாழ்ப்பாண மாவட்ட இளங்கலைஞர்களும் விருது வழங்கிக்கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும், இந் நிகழ்வில் மங்கல இசையினை என்.ஆர்.கே.இரத்தினகுமார் குழுவினரும், வரவேற்பு நடனத்தை தெல்லிப்பழை கலாசார மத்திய நிலைய மாணவிகளும், வீணாகானத்தை அனுராகம் கவின்கலை நிலைய மாணவர்களும், மயில் நடனத்தை நீர்வையூர் பொன்சக்தி கலாகேந்திரா மாணவிகளும், உறைந்த புலரி நாடகத்தினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்களும் மேற்கொண்டார்கள்.
இந் நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையினர், மாவட்ட மற்றும் பிரதேச மட்ட கலாசார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.





