எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (29.08.2024) காலை 09.00 மணிக்கும் பி.ப 02.00 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய பொறுப்பு மற்றும் அதிகாரத்துடன் எடுக்கக் கூடிய தீர்மானங்களைக் கொண்டவர்களாகவிருப்பதால் இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் பிரதான பங்காளிகளாக விளங்குவதனால், இவர்களின் பங்கானது மிகக் காத்திரமானது எனத் தெரிவித்து, ஐனநாயக ரீதியில் வினைத்திறமையாக தேர்தலை நாடத்துவதற்கான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலகர்களாக நியமிக்கப்படவுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.






