தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின்முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.01.2025) மு.ப 9.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் இன,மத, மொழி வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை நிலைநாட்ட இவ் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாவும் யாழ்ப்பாண மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளதால் மக்கள் உடல், உள ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் இத்திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், வாழ்வாதாரமற்ற குடும்பங்கள் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரமும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், 2025 ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் கீழ் நடைமுறைப்படும் திட்டத்தினூடாக கிராம மட்டங்களில் சகவாழ்வு சங்கங்களை உருவாக்குவதுடன் அங்கு காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு வழங்குதற்கான செயற்றிட்டங்களை தயாரித்தல் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் அநுராதபுரத்திலிருந்து வருகை தந்த கிறிஸ்தவ மதகுருமாா்கள், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் தலைவர் திரு. விஜித் ரொஹான் பொ்னான்டோ , பிரதி பணிப்பாளர் திருமதி சன்துனி ஆரியவன்ச, உதவிப்பணிப்பாளர் திரு.சுசந்த குமார உதவிப்பணிப்பாளர் திரு. சன்துன் லக்மால் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன் மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர், தேசிய மொழி திணைக்கள மாகாண பொறுப்பதிகாரி, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.





