யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் முதலாம் காலாண்டு குழுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.03.2025) பி.ப 2.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் விடயங்கள் தெரிவிக்கப்படது.
1.அரசாங்கத்தால் ஓர் தாயின் கருவில் குழந்தை கருவுற்றதிலிருந்து அக்குழந்தை முதியவராகும்வரை அவர்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச செயலகங்களில் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முதல் முதியோர் உரிமைமேம்பாட்டு உத்தியோகத்தர்கள் வரையான பல் வேறு தரப்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தம் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும் அவர்கள் மேலும் வினைத்திறனாக செயற்பட பிரதேச செயலாளர்கள் வழிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
2.மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் ஆனி 18 ஆம் திகதி பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை நடைபெறவுள்ளதாவும் அதற்கு முன்பாக பருத்தித்துறை, கரவெட்டி, மருதங்கேணி ஆகிய பிரதேச செயலகங்களை உள்ளடக்கியதாக பிறப்புப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கான நடமாடும் சேவை மே 16ஆம் திகதி பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடாத்துவற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு அரசாங்க அதிபர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
3.பிரதி வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண்டு 9 மற்றும் ஆண்டு 9 ற்கு கீழும் உள்ள பிள்ளைகளுக்கான அறநெறி வகுப்புக்கள், இணைப் பாடவிதானச் செயற்பாடுகள் மற்றும் ஒய்வுகளைக் கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விச் செயற்பாடுகளை நிறுத்திவைத்தல் என்ற தீர்மானத்திற்கு அமைய, பெற்றோர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் சீரான கட்டுப்பாட்டில் பேணுவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் கண்காணிப்பு அவசியம் எனத் தெரிவித்தார்.
4.ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பெண்கள் சிறுவர் பிரிவு இயங்காமல் உள்ளதாகவும், அதற்கான சேவைகள் முறைப்பாட்டுப் பிரிவுடன் இயங்குவதாகவும் கூட்டத்தில் பிரதேச செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, உடனடியாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்ட அரசாங்க அதிபர் சித்திரை மாதம் முதல் வாரத்திலிருந்து செயற்பட நடவடிக்கை எடுப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டு அதன் முன்னேற்றத்தினை பிரதேச செயலாளர் அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டார்.
5.மாணவர்களின் இடைவிலகல் தொடர்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதனை பாராட்டிய அரசாங்க அதிபர் அவர்கள் மேலும் வினைத்திறனாக செயற்படுமாறும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கேட்டுக் கொண்டார்.
6.பதிவு செய்யப்படாத பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ் தொடர்பாக சில பிறப்புச் சான்றிதழ்களை பதிவிடவே முடியாத நிலை நீடித்துவருவதற்கு ஓர் தீர்க்கமான முடிவு காணுமுகமாக மாவட்டச் செயலகத்தில் ஆனி மாதம் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள நடமாடும் சேவைக்கு முன்பதாக, ஆனி மாதம் முதலாம் திகதி அச் சிறுவர்களின் சகல விபரங்களையும் பிரதி பதிவாளர் நாயகத்திடம் கையளித்து, அதன் பிரதியினையும் தனக்கும் அனுப்பி வைக்குமாறும், நடமாடும் சேவையில் அப் பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழை பதிவதற்கு சம்பந்தப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரசன்னமும் இருத்தல் வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
7.மாணவர்கள் பச்சை குத்தினால் பாடசாலைக்கு செல்லமுடியாது என்ற விழிப்புணர்வு செயற்பாட்டை மீண்டும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வலயக் கல்விப் பணிப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
8.தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் க. பொ. த சாதாரணப் பரீட்சைக்கு தோற்றம் நகர்புற பாடசாலை மாணவர்கள் பரீட்சை நிறைவடைந்து வெளிவரும் போது அவர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் தனியார் கல்வி நிறுவனங்கள் துண்டுப் பிரசுரங்களை திணிப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதற்கு அமைய, பொலிஸ் நடவடிக்கைக்கு ஆவன செய்வதாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
9.யாழ்ப்பாணம், நல்லூர், மல்லாகம் மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசத்தில் உள்ள சில தனியார் கல்வி நிறுவனங்களுக்கு முன்பதாக பெற்றோர்கள் கூடுதலாக தரித்து நிற்பதால் பொது மக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டதற்கு அமைய, போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்காக ஆவன செய்வதாக அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
10.தாய் தந்தை இழந்து பிள்ளைகளை பராமரிப்போருக்கு மாதாந்தக் கொடுப்பனவு மாகாணத்தால் 3000.00 ரூபா வழங்கப்படுவதாகவும், தொண்டு நிறுவனங்கள் 5000.00 ரூபா வழங்குவதாகவும் தெரிவித்த மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் அவர்கள் பராமரிப்பாளர்கள் இக் கொடுப்பனவினை பெறுவதற்கு நீதிமன்ற கட்டளை பெறவேண்டும் எனவும் தெரிவித்தத்திற்கு அமைய, சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் இதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டடு, சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்கு உறுதுணையாகவிருக்கும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தமக்குரிய சேவையினை வினைத்திறனாக வழங்குவதன் ஊடக தமது வாழ்க்கையிலும் சிறப்படைய முடியும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில், மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர், உதவி மாவட்ட செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






