எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (22.04.2025) மு. ப 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம அலுவலர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்வரும்
மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த பிரிவுக்குரிய கிராம அலுவலர்கள் வழங்கும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக காத்திரமானது எனத் தெரிவித்தார். மேலும் இக் கலந்துரையாடல் ஒரு பின்னூட்டலாகவே நடைபெறும் எனவும், நடைபெற்று முடிந்த இரண்டு தேர்தல் கடமைகளில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கமைய நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கடமைகளில் வினைத்திறனான பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், கடந்த இரண்டு தேர்தல்கள் கடமைகளில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களையும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன் அதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலகர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






