பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களுக்கு முன்மொழியப்பட்ட பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமை இன்றைய தினம் (27.06.2025 ) பி.ப 4.00 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த வாரம் இடம்பெற்ற அரசாங்க அதிபர்களுக்கான மாநாட்டில் குறித்த பிரச்சினை தொடர்பாக கோரிக்கை முன்வைத்ததாகவும், ஒருவார காலத்திற்குள் அமைச்சின் அதிகாரிகள் நேரடியாக களவிஜயம் மேற்கொண்டு அரசாங்க ஓய்வு விடுதிகள் (Circuit Bungalows) மாவட்ட மற்றும் பிரதேச செயலக முன்மொழியப்பட்ட மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்கு நன்றிகளை தெரிவித்தார்.
மேலும், அரசாங்க ஓய்வு விடுதிகளில் மேலதிகமாக தங்குமிட வசதிகள் மற்றும் குடிதண்ணீர் தாங்கி வசதி மற்றும் பிற தேவைகளுக்கான நீர் தேவைப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்துடன், அல்லைப்பிட்டியில் உள்ள பொது நிர்வாக அமைச்சிற்குரிய ஓய்வு விடுதி நீண்ட காலமாக செயற்படாமல் உள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு அதனை வழங்கலாம் எனவும் ஆதலால் அவ் அல்லைப்பிட்டி ஓய்வு விடுதியினை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்க அதிபரால் வலியுறுத்திக் கேட்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் பொறியியற் பிரிவு பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்பம்) பொறியியலாளர் திரு. யூ.எல்.ஏ. நசார் அவர்கள் தெரிவிக்கையில், இக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சின் செயலாளர் அவர்களுடன் கலந்துரையாடி விரைவாக தீர்வினை பெற்றுக் கொள்ள வழிவகை செய்வதாக தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் அமைச்சின் பொறியியற் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் (தொழில்நுட்பம்) பொறியியலாளர் ஆர்.டபிள்யூ. எல்.சந்திரசிறி, அமைச்சின் பொறியியற்பிரிவு கட்டட கலைஞர்கள், உயரதிகாரிகள்,
மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர்,
பிரதம கணக்காளர், மாவட்ட மற்றும் பிரதேச செயலக தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், மாவட்ட செயலக பொறியியற்பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.






