யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையின் ஆண்டுப் பொதுக் கூட்டமானது அரசாங்க அதிபரும் பண்பாட்டு பேரவையின் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.06.2025)காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இக் கூட்டத்திற்கு பெருந்திரளாக கலைஞர் வருகை தந்தமையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு குறைந்தளவான கலைஞர்களே வருகை தந்தமையினால், இப் பொதுக் கூட்டத்திற்கு கூடியளவு கலைஞர்கள் வருகை தருவதனை கலாசார உத்தியோகத்தர்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என தாம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் எமது யாழ்ப்பாண மாவட்டம் கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பேணும் மாவட்டம் எனவும், கலைஞர் கெளரவிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்ததுடன், அடுத்த சந்ததிக்கு எமது கலைகள் கலாசாரங்கள் எடுத்தச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனவும் தெரிவித்தார். மேலும், புலம்பெயர் தேசங்களில் எம்மவரால் கலைகள் சிறப்பான முறையில் வளர்க்கப்பட்டு வருவதனையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து நிதி உதவிகளைப் பெற்று கிராமிய ரீதியாக கலை நிகழ்ச்சிகளை நடாத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கும் பண்பாட்டுப் பெரு விழாவுடன் எமது செயற்பாடுகள் நின்றுவிடாது கலைகளை வளர்ப்பதற்கு உரிய ஆரோக்கியமான ஆலோசனை களை எமக்கு கலைஞர்கள் வழங்கி எம்மையும் ஊக்கப்படுத்தி எமது கலை கலாச்சார பண்பாடுகளை பேணவதற்கும் மேன்மேலும் வளர்ப்பதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
இப் பொதுக் கூட்டத்தில் ஆண்டுப் பொதுக்கூட்ட அறிக்கை மற்றும் கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டு அங்கத்தவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபையானது தெரிவு செய்யப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவையின் தலைவராக பதவி வழியாக அரசாங்க அதிபரும், செயலாளராக மாவட்ட கலாசார உத்தியோகத்தரும் மற்றும் நிர்வாக சபையில் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவின் கலாசார உத்தியோகத்தர்களும் செயற்படுவார்கள். ஏனைய பதிவிகளுக்கானதெரிவுகள் நடைபெற்றது. அந்த வகையில், உப தலைவராக பேராசிரியர் என். சண்முகலிங்கன், உப செயலாளராக திரு. கே. தேவானந், பொருளாராக திரு. செ. மகேஷ் மற்றும் 15 நிர்வாக சபை உறுப்பினர்களாக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு ரீதியாக ஒரு கலைஞர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். இப் பொதுக் கூட்டத்தில் 35 பேரைக்கொண்ட புதிய நிர்வாக சபையானது யாப்பின் பிரகாரம் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக செயலாளரும், மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தருமான திருமதி சுகுணாளினி விஜயரட்ணம் அவர்களின் நன்றியுரை இடம் பெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் சிரேஷ்ட இளங் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6