இதன் போது நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் அரசாங்க அதிபரிடம் தெரிவிக்கையில், கடல்பிரயாணம் மூலம் நெடுந்தீவு சென்று கடமையாற்றும் அனைத்துத் தர உத்தியோகத்தர்களையும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கடமையாற்றுவதாக சமூக வலைத்தளங்களில் குறிப்பிடுவது மிகுந்த மன வேதனைக்குரிய வியடமாகும் எனவும், தாம் விரக்தி நிலையில் இருப்பதாகவும், அச்செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் உத்தியோகத்தர்கள் தெரிவித்தார்கள்.
மேலும், பிரதேச செயலாளர் ஒரு பெண்ணாக இருக்கின்ற பொழுதிலும் கடமைக்கு ஒழுங்காக சமூகமளிப்பதுடன் அவசர நிலமைகளின் போது நெடுந்தீவிலேயே தங்கி நின்று பணியாற்றுபவர் எனவும்
மேலும், பொதுவாக தண்டனையின் பேரிலேயே நெடுந்தீவிற்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக பரவலான கருத்து உள்ளமையும் மிகவும் வேதனைக்குரிய விடயம் எனவும் உத்தியோகத்தர்களால் தெரிவிக்கப்பட்டு உண்மைக்குப் புறம்பான செய்தி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரை நேரடியாக கோரியதுடன், கோரிக்கை மனுவினையும் கையளித்தார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், சமூக வலைத்தளங்களில் வரும் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை பெரிது படுத்ததேவையில்லை எனவும், குறித்த பதிவு தொடர்பில் உத்தியோகத்தர்கள் மன உளைச்சலடைய வேண்டிய அவசியமில்லை என்றும் உத்தியோகத்தர்கள் எவ்வளவு சிரமப்பட்டு நெடுந்தீவிற்கு சென்று கடமையாற்றுகின்றாா்கள் என்பது எமக்கும் அங்கு வாழும் மக்களுக்கும் நன்கு தெரிந்த விடயம் என தெரிவித்தாா்.
மேலும், தற்போது கடமையாற்றும் பிரதேச செயலாளர் பதவியுயர்வு கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் எனது கோரிக்கையின் அடிப்படையிலேயே புதிய பிரதேச செயலாளர் கடமையை பொறுப்பேற்கும் வரையில் தொடர்ந்து கடமையாற்றி வருகின்றார் எனவும் தெரிவித்தார்.
உதவி பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அற்ற நிலையில்அனைத்து கடமைகளையும் பிரதேச செயலாளரும் ஏனைய உத்தியோகத்தர்களும் இணைந்து எவ்வித முறைப்பாடுகளும் அற்ற நிலையில் கடமையாற்றுவதற்கு தனது பாராட்டுக்களை அரசாங்க அதிபர் தெரிவித்தாா்.
மேலும், நெடுந்தீவு வாழ் மக்களின் நிலைமையினை கருத்திற்கொண்டு உத்தியோகத்தர்களை அங்கு நியமிக்கும் போது வேறு பிரதேச செயலகங்களிலிருந்து கடமைக்கு செல்லும் உத்தியோகத்தர்கள் பெரும் சிரமங்களிற்கு உள்ளாவது அனைவரும் அறிந்த விடயம் என்றும், வழமையாக காலை 8.00 மணிக்குப் புறப்பட்ட படகு சேவை அவ் உத்தயோகத்தர்கள் உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்வதற்கு ஏதுவாக கடந்த 2025.08.11ம் திகதி முதல் காலை 7:30 மணிக்கு நெடுந்தீவு நோக்கி புறப்படுவதாகவும், யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் தான் நன்கு அறிந்துள்ளதாகவும் தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், நெடுந்தீவு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் மிகவும் அர்ப்பணிப்புடன் ஏனைய சிரேஷ்ட தர உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படாத சந்தர்ப்பத்திலும் பிரதேச செயலாளருடன் இணைந்து கடமையாற்றும் உத்தியோகத்தர்களது சேவை அளப்பரியது எனவும் சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதனை விடுத்து ஆக்கபூர்வமான ஆரோக்கியமான கருத்துக்களையும் தகவல்களையும் வெளியிடுவதே ஆரோக்கியமான சமுகத்தினை உருவாக்கும் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. பா. ஜெயகரன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.






