இலங்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் ''2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல்" நிகழ்வு (23.10.2025) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய கைத்தொழில்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பாடசாலைகள் மற்றும் சமூகப் பங்களிப்பை வரவேற்கும் வகையில் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில்கள், வர்த்தகங்கள் மற்றும் சேவைக் கலாசாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் செயல்படுவதற்காக சமூகத்தை ஊக்குவித்தல் மற்றும் நிலைபேறான அபிவிருத்திக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் நிகழ்வானது "அழகான நாடு - புன்னகைக்கும் மக்கள் "என்ற நோக்குடன் செயல்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதோடு சுற்றுச்சூழலுக்கு உகந்த கைத்தொழில் பிரிவு,சுற்றுச்சூழலுக்கு உகந்த அரச நிறுவன பிரிவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தனியார் துறை பிரிவு , சுற்றுச்சூழலுக்கு உகந்த பாடசாலைகள்,புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்ட பிரிவு, சுற்றுச்சூழலுக்கு உகந்த புத்தாக்கப் பிரிவு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக செயல்படும் அரச சார்பற்ற நிறுவன பிரிவு, ஊடக பிரிவு மற்றும் சமூக ஊடக பிரிவு ,ஆகிய 9 பிரிவுகளின் கீழ் மொத்தம் 132 விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூா் பிரதேச செயலகம் சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award மற்றும் அகில இலங்கை ரீதியாக சிறந்த சமூக வலைத்தளத்திற்கான (Facebook ) Special Jury Award ஆகிய இவ் இரண்டு விருதுகளையும் பெற்றுக் கொண்டது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
 
 
1 2