மாவட்ட சமுர்த்திப்பணிப்பாளராக கடமையாற்றி சாவகச்சேரி பிரதேச செயலாளராகஇடமாற்றம் பெற்றுச் சென்ற முன்னாள் மாவட்ட சமுர்த்திப்பணிப்பாள திரு பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்களுக்கான சேவைநலன் பாராட்டு விழா யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (12.11.2025) பி. ப.12.15 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், நெடுந்தீவு பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது தனது செயற்பாடுகளை மிகவும் சிறப்பாக ஆற்றியதாகவும் குறிப்பிட்டதுடன், சமுர்த்தித் திணைக்களம் மிகவும் சவால்கள் நிறைந்த நிர்வாகக் கட்டமைப்பாக காணப்பட்டபோதும் சிறப்பாக தமது சேவையினை திரு.எப்.சி. சத்தியசோதி அவர்கள் ஆற்றினார் எனவும், சிறந்த உத்தியோகத்தராக கடமையாற்றியுள்ளார் எனவும் எனக்குறிப்பிட்டார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின் சுயவிபரக் கோவைகளை உறுதிப்படுத்த உறுதுணையாக செயற்பட்டார் எனவும், இத் திணைக்களத்தில் தவறுகள் ஏற்படாமல் செயற்பட வேண்டும் என்பதில் முனைப்பாக செயற்பட்டவராகவும் கணக்காய்வு அறிக்கைகளை சிறப்பாக பேணியதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். மேலும், அனைவருடனும் நட்பு ரீதியாக எல்லோரோடும் ஒருங்கிணைந்து பழகும் குணம் கொண்டவராகவும் தலைமைத்துவ பண்பு கொண்டவராகவும் பிரதேச மட்டங்களிலும் சமுர்த்திக்கான வினைத்திறனான பங்களிப்பை வழங்கியுள்ளார் எனவும் தெரிவித்த அரசாங்க அதிபர் இவரின் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன், பிரதம கணக்காளர் திரு. எஸ். கிருபாகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்களால் வாழ்த்துரைகள் நிகழ்த்தப்பட்டது. வாழ்த்துரையினைத் தொடர்ந்து, திரு. பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்களுக்கு அரசாங்க அதிபரினால் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டு வாழ்த்துப்பாமாலை வழங்கப்பட்டது. இறுதியாக திரு திரு பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்களினால் ஏற்புரை நிகழ்த்தப்பட்டது. திரு பிரான்சிஸ் சந்திர சத்தியசோதி அவர்கள் 01.11.2023 ஆம் திகதி தொடக்கம் 31.08.2025 வரை மாவட்ட சமுர்திப்பணிப்பாளராக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.






