மாவட்டச் செயலகத்துடன்தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் கல்வி அமைச்சும் இணைந்து மாணவர்கள் மத்தியில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில் தேசிய ரீதியாக மாணவ முதல்வர்களை பயிற்றுவிக்கும் மாவட்ட மட்ட மாணவர் தூதுவர் நிகழ்ச்சித்திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.11.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் பாடசாலை விடுமுறைக் காலமாக இருந்த போதும் குறித்த மாணவர் தூதுவர் நிகழ்ச்சித்திட்டத்திற்காக வருகை தந்திருந்த அனைவரையும் வரவேற்றுக் கொண்டு இந் நிகழ்ச்சித் திட்டமானது பாடசாலை மட்டத்திலிருந்து தற்போது பல்கலைக்கழகம் வரை செயற்படுத்தப்படுகிறது எனவும், மாணவர் தூதுவர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படும் இந் நிகழ்ச்சித் திட்டமானது மாணவர்களின் செயற்பாடுகள் அவர்களை எவ்வாறு ஆற்றுப்படுத்தலாம் அதன் சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக விரிவாக விளக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், மாணவ பருவம் என ஆரம்பிக்கும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் இன்று முழுமையாக மாற்றமடைந்துள்ளதாகவும், எனவே இந்த பல்வேறுபட்ட சமூக மாற்றத்திற்கு உட்பட்டு மாணவர்களை வழிப்படுத்த வேண்டிய தேவை உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பாடசாலை நிர்வாக கட்டமைப்புக்கு உட்பட்டு ஆசிரியர்கள் செயற்பட வேண்டுமெனவும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கான செயற்பாடும் சமூகத்திற்கு மிகவும் வேண்டப்பட்டதெனவும் முன்னைய காலங்களை விட ஆசிரியர்கள் பல்வேறுபட்ட பரிமாணங்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் ஒவ்வொரு பிள்ளையும் சமூகமயமாக்கலின் பொருட்டு முன்பள்ளியிலிருந்து ஆரம்பித்து பாடசாலையுடன் இணைகிறது எனவும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களை ஆற்றுப்படுத்துவதில் மிகப் பெரிய சவாலாக உள்ளதாகவும், அறிவு, திறன், மற்றும் மனப்பாங்கு என்ற விடயங்களில் தற்போது மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய முக்கியமான தேவை உள்ளது எனவும், கடந்த காலங்களை விட தற்போது மாணவர்களின் மனப்பாங்கில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், அந்த வகையில் மாற்றம் என்பது ஏற்பட வேண்டிய ஓன்றுதான் ஆனால் அந்த மாற்றத்திற்கு ஏற்றவாறு அவர்களை ஆற்றுப்படுத்த வேண்டியது அவசியமானதென அரசாங்க அதிபர் தெரிவித்து இச் செயற்பாட்டை அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.மேலும், இப் பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்கள் இதனை சரியான முறையில் பாடசாலையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்த வேண்டுமென கேட்டுக் கொண்டதுடன், குறித்த இவ் தூதுவர் நிகழ்ச்சி திட்டத்தை அனைத்து பாடசாலைகளிலும் குறித்த ஒரு தரத்திற்கு மேல் செயற்படுத்த வேண்டுமென தெரிவித்தார். மேலும் மாணவர்களை தண்டிப்பதில் தற்போது சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டுள்ளதால், பிள்ளைகளை சரியாக வழியில் ஆற்றுப்படுத்த வேண்டுமெனவும், மாணவர்களுக்கான ஆற்றுப்படுத்தல் தேவைகள் ஏதும் இருப்பின் பாடசாலை அதிபர் மூலமாக கோரிக்கை முன்வைக்கும் போது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அனுசரணையுடன் மாவட்ட செயலகம் தனது ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்க முடியுமென அரசாங்க அதிபர் தெரிவித்தார்.இந் நிகழ்வில் வளவாளர்களாக யாழ் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய நிபுணர் திரு செ. பிரணவன், சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு இ. ரவிராஜ், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை வெளியிடை சேவை இணைப்பாளர் திருமதி ய.சியாமினி, மாவட்ட மனிதவள உத்தியோகத்தர் திரு ஸ்ரீபவன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினார்கள். மாணவர் தூதுவர் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொண்ட 82 பாடசாலைகளின் அதிபர்கள், பொறுப்பாசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட மாணவர் தலைவர் ஆகியோருக்கு அரசாங்க அதிபரால் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு இ. செந்தூரன் நன்றியுரை வழங்கினார். இவ் செயலமர்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாண வலயம், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், மாணவர் முதல்வர் சபை பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ முதல்வர்கள் உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.






