'தமக்கென ஒரு இடம் - அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (16.01.2026) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் அதிமேதகு சனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன. நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ் வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் எந்திரி எல்.பி.குமுது லால் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இந் நிகழ்வில், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் ஆகியோர் உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து அதிமேதகு சனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் சிறப்புரை ஆற்றினார். இந் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் கௌரவ அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ ஆனந்த விஜயபால, வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நா.வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் அதிகாரிகள், மாகாண திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், திணைக்கள தலைவர்கள், விடைய உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.






