அரசசார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (05.02.2026) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 2025 ஆம் ஆண்டு அரசசார்பற்ற நிறுவனங்களினால் பிரதேச செயலக ரீதியாக மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டத்திற்கும், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தினால் அவசர அவசியத் தேவை கருதி முன்வைக்கப்படும் கோரிக்கைகளை பரிசீலித்து ஒத்துழைப்பு வழங்கிவருகின்றமைக்கும் நன்றியினைத் தெரிவித்தார். அரசசாா்பற்ற நிறுவனங்கள் மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த வகையில் செயற்படுவதன் மூலம் வினைத்திறனாக மேன்மேலும் செயற்பட முடியும் எனவும் தெரிவித்து, ஒவ்வொரு அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படவுள்ள செயற்றிட்டங்களுக்கான (Action Plan) உரிய அறிவுறுத்தல்களையும் அரசாங்க அதிபர் வழங்கினார்.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் அவர்களால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
01.அரச சார்பற்ற நிறுவனங்களுடனான மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தினை காலாண்டுக்கு ஒரு தடவை நடாத்தப்பட வேண்டும் எனவும், பிரதேச செயலக ரீதியாக வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்திவரும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பிரதேச செயலாளர்கள் சீரான முறையில் முன்னேற்றக் கூட்டத்தினை நடாத்துமாறு பிரதேச செயலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
02.பிரதேச செயலக ரீதியான தேவைப்பாடுகளில் பிரதானமான 03 முன்னுரிமை தேவைப்பாடுகளின் விபரங்களை பிரதேச செயலாளர்கள் ஒரு வார காலத்திற்குள் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும், அதனை தொகுத்து அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்திற்கு சமர்ப்பித்து ஒருங்கிணைப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபரால் தெரிவிக்கப்பட்டது.
03.2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கூட்டத்தினை நடாத்தி அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள தேவைப்பாடுகளின் முன்மொழிவு களை தெரிவு செய்வதன் மூலம், சம்பந்தப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்கு பொருத்தமான முன்மொழிவுகளை 2027 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தக் கூடிய வினைத்திறனாக செயற்பாட்டிற்கு அக் கூட்டம் வலுச் சேர்க்கும் எனத் தெரிவித்தார்.
04 நெடுந்தீவு, மருதங்கேணி, ஊர்காவற்றுறை, வேலணை மற்றும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வறுமையான குடும்பங்கள அதிகமுள்ளதால் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை அதிகம் எதிர்பார்ப்பதாகவும், ஏனைய 10 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளில் உள்ள வறுமையான கிராமங்களின் விபரங்கள் மாவட்டச் செயலகத்தினால் சமர்ப்பிக்கப்படும் எனவும், அக் கிராமங்களில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்றிட்டங்களை முன்னுரிமைப்படுத்துமாறும் தெரிவித்தார்.
05.அரச சார்பற்ற நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செயற்றிட்டங்களை (Action Plan) சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பிவைப்பதுடன், பிரதேச செயலாளர்கள் சுகாதாரம், கல்வி போன்ற அரசாங்க பங்குதாரர்களுடன் இணைந்து அத் திட்டங்களை வினைத்திறனாக மேற்கொள்ள அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.
06.பாடசாலைகளில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்விக் கொடுப்பனவுகளை அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று வழங்கி செயற்பட்டுவருவதனால், அரசாங்கத்தினால் மாற்றுத்திறனாளிகளின் கொடுப்பனவிற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள குடும்பங்கள் அல்லது கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரங்களை பிரதேச செயலாளர்கள் 15 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டச் செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
07.யாழ்ப்பாண பிரதேச செயலக கரையோரப் பகுதியல் சடுதியாக புற்றுநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிரதேச செயலாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக, பிரதேச செயலாளருடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் இணைந்து ஆராய்ந்து உரிய செயற்றிட்டத்தினை இனங்காணுமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு ந. தயாபரன், பிரதேச செயலாளர்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.






