மண்டைதீவில் அமைக்கப்பட்டுவரும் சர்வதேச கிரிக்கெட் மைதான அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில், விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. எம். பி. என். எம். விக்ரமசிங்க மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு எஸ். அச்சுதன் ஆகியோரின் பங்குபற்றலுடன் இன்றைய தினம் (18.02.2026) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் தொடர்பாக ஏற்கனவே பல ஆரோக்கியமான கருத்தாடல்கள் பகிரப்பட்டுள்ளதாகவும், சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படுவதற்கு கை கொடுப்பதன் ஊடாக அபிவிருத்திகளை மேற்கொள்ள கூடியதாக காணப்படும் எனவும், அங்குள்ள பாடசாலை அபிவிருத்தி மற்றும் வணிக அபிவிருத்தி மேலும் அதிகரித்து செல்லும் நிலை காணப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிமேதகு சனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் தினத்தன்று சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாக அக்கறையுடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளதாகவும், மைதானத்தின் பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் தெரிவித்ததுடன், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடாக நீண்டகால நிலைத்திருக்கக்கூடிய தன்மைகளை எவ்வாறு அதிகரிக்கலாம் என்பது தொடர்பாகவும் பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக எவ்வாறான முன்னேற்றங்களை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக சாதக, பாதக தன்மைகளை ஆராய்ந்து ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். மேலும் மண்டைதீவு மற்றும் வேலணையில் உள்ள பாடசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலை ஆகியவற்றை அபிவிருத்தி தொடர்பாகவும் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் பங்களிப்புக்களையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் கருத்து தெரிவிக்கையில், இக் கலந்துரையாடலின் நோக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிரிக்கெட் மைதானம் அமைப்பதன் ஊடாக விளையாட்டு நகரம் உருவாக்கப்படும் எனவும், இதனூடாக பல்வேறு இணைந்த உட்கட்டமைப்பு வசதிகள் அதனுடன் இணைந்த சேவைகள் போன்றவை தொடர்பாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபை கையாளுவதாகவும், இவ் மைதானத்தை அமைப்பதன் ஊடக வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும் எனவும், வடக்கு மாகாண சபை மற்றும் பிரதேச சபையின் வருமானங்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாகவும் தெரிவித்து சர்வதேச விளையாட்டு மைதானம் தொடர்பான பல்வேறு கருத்தாடல்களை பகிர்ந்து கொள்ளுமாறும் தெரிவித்துக் கொண்டார். இக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கெளரவ எஸ். அசோக், ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபையின் உறுப்பினருமான கெளரவ எஸ் கபிலன், விளையாட்டு அமைச்சின் பணிப்பாளர் திரு டிலும் தயாரத்தின, இலங்கை கிரிக்கெட் சங்கத்தினைச் சேர்ந்த திரு சாலக்கா என். சில்வா மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ஸ்ரீ பெரேரா, மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் திரு ரி. அகிலன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்திரு. இ. சுரேந்திரன்நாதன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, நில அளவைகள் திணைக்கள சிரேஷ்ட அத்தியட்சகர் திரு. எம். தர்மபால, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள் மற்றும் மற்றும் துறை சார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 8 9 10 11