இலங்கை பெண்கள் பணியகமும் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தினம் இன்றைய தினம் (31.03.2026) மு.ப 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் "பெண்களின் தலைமைத்துவம் செழிப்பான தேசத்தின் பெருமை"எனும் தொனிப்பொருளில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வடமாகாண நகர அபிவிருத்தி சபை பிரதிப் பணிப்பாளர் திருமதி.க.கஜீவன் அவர்களும், கெளரவ விருந்தினராக பாலம் செயற்றிட்டம் முகாமையாளர் சுவீற்ரி தேவராஜா. அவர்களும் கலந்து கொண்டார்கள். பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் அவர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி கலந்து கொண்டிருந்த விருந்தினர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் மங்கல விளக்கேற்றல், வரவேற்பு நடனம், வரவேற்புரை என்பவற்றுடன் ஆரம்பமானது. இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், 2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின நிகழ்வு இன்றைய தினம் நடைபெறுவதாகவும், இன்றைய நிகழ்விற்கு இலங்கை நிர்வாக சேவையின் உயரிய பதவியில் உள்ள ஒருவரை அழைத்திருப்பதாகவும் மற்றும் மாகாணத்தில் அபிவிருத்திக்கான செயற்பாடுகளை வெளிப்படுத்தி மாகாணத்தை நகரம் சார்ந்த பொருளாதார ரீதியாக மாற்ற தனது பங்களிப்பை வழங்கியவர்களயும் அழைத்து இருப்பதாகவும் அந்த வகையில் நிர்வாக ரீதியான ஆளுமை கொண்டவர்களும் உயரிய பதவிகளையும் வகிக்கும் பெண் சமுதாய மூத்த அரச உத்தியோகத்தர்களை அழைத்து கெளரவப்படுத்தும் வகையிலும், பெண்களின் நிலைப்பாட்டை அல்லது வளர்ச்சி போக்கினை சமூகத்திற்கு எடுத்துரைப்பதற்காகவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பெண் தொழில் முயற்சியாளர்களை அடையாளப்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிளான சுய தொழில் முயற்சி கண்காட்சி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பாலம் நிறுவனத்தின் அனுசரணையுடன் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு சுயதொழில் ஊக்குவிப்பு கொடுப்பனவு ஒன்றையும் வழங்கவுள்ளதாகவும், மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தொடர்பான நலன் நோன்பு திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும், பெண்கள் தொடர்பாக செயற்பாடுகள் மற்றும் பெண்கள் வளர்ச்சி மிகவும் போற்றத்தக்க வகையிலேயே பெண்கள் காணப்படுவதாகவும், எண்ணிக்கை ரீதியாக பெண்கள் மிக அதிகமாக காணப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக நிர்வாக ரீதியாக, தொழில் ரீதியாக, பல்கலைக்கழகத் துறை ரீதியாக போன்ற எல்லா துறைகளிலும் அவர்களின் எண்ணிக்கை ரீதியில் பெண்கள் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும், சனத்தொகை ரீதியில் பார்க்கும் போதும் ஆண்களை விட பெண்களின் வீதம் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஒரு பெண்ணின் வளர்ச்சியினை நோக்கும்போது தனிப்பட்ட ரீதியாக பார்க்கப்படாது அது சமூகம் சார்ந்த வளர்ச்சியாக பார்க்கப்படுவதாகவும், ஆரம்ப காலத்தில் பெண்கள் கல்வி கற்பதில் பல தடைகள் காணப்பட்டதாகவும், தடைகளை தகர்த்தெறிந்து கல்வியில் மேம்பட்டவர்களாக பெண்கள் காணப்படுவதாகவும், பெண்கள் தமது சந்ததியினரையும் கல்வியில் வழிப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் "ஈன்று புறந்தருதல் தாயின் கடமையை சான்றோர் ஆக்குதல் தந்தையின் கடமை "எனக் கூறுவர் ஆனால் தற்போது இரண்டையும் பெண்களின் தமது கைகளில் எடுத்துள்ளதாகவும் பெண்கள் தாங்கள் பெற்ற அறிவை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும் என்ற நோக்கோடு செயற்பட்டு வருவதாகவும் அந்த வகையில் பெண்கள் நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியில் அளப்பரிய பங்களிப்பை ஆற்றி இருப்பதாகவும், மாவட்டத்திலுள்ள உத்தியோகத்தர்கள் பெண் தொழில் வளர்ச்சியிலே காத்திரமான பங்களிப்பை வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந் நிகழ்வில் சம்போல் அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் திருமதி வைதேகி நரேந்திரன் அவர்களால் பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. இதனை விட 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடாத்திய சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கெளரவிப்பு மற்றும் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளின் சிறப்புரைகள் என்பன நடைபெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.






