தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம்(11.04.2026) கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் பிரசன்னத்துடன் மு.ப 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவின் தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை விடுவிக்குமாறு17 பேர் தங்களுடைய கோரிக்கையினை முன்வைத்திருந்ததுடன், அவர்களுடைய காணி உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்கள். கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களின் தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ ஹர்ஷன நாணயக்கார, கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் , தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவகங்கா ஆகியோரின் பங்குபற்றலுடன் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் அவர்களுடைய உறுதிப்படுத்தப்பட்ட உறுதிகள் கையளிக்கப்பட்டன. மேற்படி காணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக நில அளவை திணைக்களத்தின் நில அளவீட்டை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் கடிதம் அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் அவர்களது காணிகளை நில அளவீடு செய்ய வேண்டிய தேவைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் காணி உரிமையாளர்களுக்கு தகவல் அறிவித்து அவர்களுடனான கலந்துரையாடல் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேற்படி கலந்துரையாடலின் அதனடிப்படையில் எதிர்வரும் 17ஆம் திகதி காலை 9.00 மணிக்கு காணி உறுதிகளுக்கு அமைய காணி உரிமையாளர்களின் அடையாளப்படுத்தலுடன் நில அளவையினை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. மேலும் குறித்த காணிகள் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்டு நில அளவைத் திணைக்களத்தின் வரைபடம் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் மாவட்ட செயலகத்தினால் ஏற்கனவே இது தொடர்பில் நியமிக்கப்பட்ட குறித்த குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டு காணிகள் விடுவிப்பதற்குரிய தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மேற்படி கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு பா.ஜெயகரன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திருமதி சிவகங்கா, சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் திருஎன்.தர்மபாலா, நில அளவை அத்தியட்சகர் திரு V.பிரேமதாஸ, காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10