யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவைக் கூட்டமானது அரசாங்க அதிபரும் பண்பாட்டு பேரவையின் தலைவருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (08.05.2026) மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு, அரசாங்க அதிபர் அவர்களினால் பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
1.யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பெருவிழாவினை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
2.பண்பாட்டுப் பெருவிழாவில் வெளியிடவுள்ள யாழ்ப்பாண இதழ் - 05 ற்கான தலைப்பு தீர்மானிக்கப்பட்டது. " நாட்டார் வழக்காறுகளும் சமூக அறிவியலும்" தலைப்பே தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும்,
இதழுக்கான ஆக்கங்களை பொது மக்களிடமிருந்து எதிர்வரும் யூன் மாதம் 30 ஆம் திகதிற்கு முன்னர் பெற்றுக்கொள்ளநடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க அதிபரால் அறிவுறுத்தப்பட்டது. மேலும் நூலுக்கான ஆலோசனைக் குழு, மதிப்பீட்டுக் குழு மற்றும் மலர்குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
3.பண்பாட்டு விழாவில் ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியான கலை நிகழ்வுகளை நடாத்த ஒழுங்கு செய்யுமாறும் கலாசார உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சுகுணலினி விஜயரத்தினம், மாவட்ட மற்றும் பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






