யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், ஊராட்சி கலந்துரையாடல், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம்(12.05.2026) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் மற்றும் வடமாகாண மகளீர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி க.தாரணி ஆகியோரது இணைத் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பிரதேச மட்டங்களின் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகளை அவை சம்பந்தமான அனைத்து திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடி ஆராய்ந்து அது தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான களமாக இது அமைந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், பல்வேறுபட்ட செயற்திட்டங்களை இத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளக்கூடியதாக உள்ளதாகவும் இக்கலந்துரையாடலில் சமுர்த்தி சேமிப்பு கணக்கு, மருதங்கேணி பிரதேச வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம் தொடர்பாக கலந்துரையாட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும், மக்களுடைய பிரச்சினைகளை அதிகாரிகளாகிய நாங்களும் மக்கள் பிரதிநிதிகளும் இணைந்த வகையில் சாதகமாக பரிசீலித்து செயற்பட வேண்டும் எனவும் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகிய நாம் மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை பெற்றுக் கொள்கின்றோம் என்பதுடன் அனைவரும் ஒருங்கிணைந்த வகையிலே செயற்றிட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஏதுநிலை உருவாகும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் எதிர்நோக்கும் பல்துறைசாா் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஊராட்சி முற்றத்தில் கலந்துரையாடி தீர்வு வழங்குவதை நோக்காக கொண்டு இக்கூட்டம் நாடாத்தப்பட்டது. இதில் ஊராட்சி முற்ற கூட்டத்தின் நோக்கம், மாவட்ட அளவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளாக அடையாளம் காணப்பட்ட சமுர்த்தி சேமிப்புக்கணக்கு, வணிக நிலையங்களில் விலைப்பட்டியல், வெதுப்பக உணவுப் பொருட்களின் தரம் மற்றும் நிறை, மருதங்கேணி வீதி அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் அழகுக்கலை, நெடுந்தீவு போக்குவரத்து, விவசாய நிலங்களை பாதுகாத்தல் தொடர்பான விடயங்களும் மாவட்ட ரீதியில் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் குடிசார் அமைப்புகளின் சம்மேளனத் தலைவர் திருமதி ம.தமிழ்செல்வி, மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், மருதங்கேணி பிரதேச செயலாளர், தொடர்புடைய அரச அதிகாரிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட குடிசார் அமைப்புகளின் சம்மேளன உறுப்பினர்கள் முதலானோர் கலந்து சிறப்பித்தனர்.






