யாழ். மாவட்டச் செயலகத்தில் நிதி நிலைசார் நிகழ்நிலை மென்பொருள் (Computerized Integrated District Secretariat Accounting System) அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் இன்றைய தினம் (14.05.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் மென் பொருளானது அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, பிரதம கணக்காளர் திரு.எஸ். கிருபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்களான திரு.செல்வரத்தினம் சிவச்செல்வன் மற்றும் திரு. செல்வராஜா அமல்ராஜ் ஆகியோரால் அரச நிதி விதிமுறைகள் மற்றும் கணக்கீட்டு முறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், இவ் மென்பொருளின் நோக்கமானது காலத்துக்கு காலம் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப வினைத்திறன் மிக்கதாக மேற்கொள்வதற்கும், சிறந்த உள்ளக கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், காலத்துக்கு காலம் கிடைக்கப்பெறும் நிதிசார் நடவடிக்கைகள் தொடர்பான மாற்றங்களை இற்றைப்படுத்துவதற்காகவும், மாவட்ட செயலகத்துடன் பிரதேச செயலகங்களை நிகழ்நிலையில் ஒருங்கிணைத்து எவ்விடத்திலிருந்தும், எந்நேரமும் துல்லியமான கணக்கீடுகளை மேற்கொண்டு காலதாமதமற்ற வெளிப்படையான மற்றும் உன்னதமான அரச சேவையை உறுதி செய்வதாகும் எனவும் தெரிவித்தார். மேலும், இதன் தனித்துவமான நன்மைகளாக மாத இறுதி கணக்கறிக்கைகளை விரைவாக தயார் செய்யலாம் என்பதுடன், நிதி கொடுக்கல் வாங்கல்களில் முழுமையான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதாகும் எனவும் தெரிவித்து, இவ் மென்பொருள் உருவாக்க உறுதுணையாகவிருந்த பிரதம கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உத்தியோகத்தர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், இவ் மென்பொருளினை தனியார் நிறுவனத்தின் மூலம் தயாரிப்பது எனின் அதிக செலவுகள் ஏற்படும் எனவும், எமது உத்தியோகத்தர்கள் மூலம் வடிவமைக்கப்பட்டதால் எமக்கு எதுவித செலவும் இல்லாமல் வினைத்திறனான கடமைக்கு உறுதுணையாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இவ்வாறான வினைத்திறனாக செயற்பாடுகளுக்கு அனைவரினதும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வில் இவ் மென்பொருளினை வடிவமைத்த உத்தியோகத்தர்களுக்கு அரசாங்க அதிபரால் மெச்சுரை வழங்கி கெளரவிக்கப்பட்டனர். தொடர்ந்து இவ் மென்பொருள் தொடர்பான பயனர் கையேடு (User Guide) அரசாங்க அதிபரினால் சகல பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.பா.ஜெயகரன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12