உலக சுற்றாடல் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 05 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. சுற்றாடல் அமைச்சு மே மாதம் 30ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05ஆம் திகதி வரை சுற்றாடல் வாரமாக பிரகடனப்படுத்தி பல்வேறு விழிப்புணர்வு செயற்றிட்டங்களை பரவலாக முன்னெடுத்து வருகிறது. இந் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். A-Head Trust முன்பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்றைய தினம்(04.06.2026) வியாழக்கிழமை காலை 08.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்ட செயலக சுற்றாடல் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து கருத்துத் தெரிவிக்கையில், முன்பள்ளி பருவம் பிள்ளைகளின் வாழ்க்கை மிக முக்கியமான பருவமாகும். இப் பருவம் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அடித்தளமாக அமைகின்றது எனவும், சமூகமயமாக்கல் செயற்பாடு என்பது முன்பள்ளிகளிலேயே ஆரம்பமாகின்றது எனவும் தெரிவித்தார். மேலும், குழந்தை பிறந்து தனது வீட்டு சூழலை விட்டு முதல்முதலாக வெளிச்சூழலுடன் பழகும் வாய்ப்பு முன்பள்ளிகளிலேயே ஏற்படுத்தப்படுகின்றது எனவும், பிள்ளைகளை சரியாக வழிப்படுத்தி நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அனுப்புகின்றனர் எனவும், எனவே இந்த சிறார்களை சரியான வழியில் வழிபடுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், இச் சிறப்பான நிகழ்வாக ஒழுங்குபடுத்திய மாவட்ட செயலக உத்தியோகத்தருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன், சர்வதேச சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்தமைக்கும் தனது பாராட்டுகளையும் தெரிவித்தார். மேலும், இந்த செயற்பாடுகள் சிறப்பாக அமையவேண்டும் என்றும், சிறுவர்களின் எதிர்காலம் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றும் அரசாங்க அதிபர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மனப்பாங்கு மேம்பாட்டின் மூலம் சூழல் பாதுகாப்புக்கு பங்களித்தல் எனும் நோக்கில் விழிப்புணர்வு ஓவியங்களால் உருவாக்கப்பட்ட பிரசுரங்கள் சிறார்களுக்கு வழங்கி வைக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டன. மேலும், கழிவுகளை தரம் பிரித்து அகற்றும் மனப்பாங்கினை பள்ளிச்சிறார்களுக்கு ஏற்படுத்தும் முகமாக குப்பை தொட்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வின் நினைவாக வளாகத்தில் மரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது. தொடர்ந்து "சுற்றாடல் மாற்றங்களுக்கு எதிராக செயற்படுவோம்" எனும் தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தினை சுற்றாடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வி.பரணிதா நிகழ்த்தினார். இந் நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் Dr. P.A டினேஷ் குஞ்ஜே, A-Head Trust முன்பள்ளி இணைப்பாளர் திரு. G. சஜரூபன், மாவட்ட செயலக சுற்றாடல் கிளை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15