யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில், இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் எம்.ஆர். ராஜா அவர்களுக்கு வீடு நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்களின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (23.06.2026) காலை 7.00 மணிக்கு நடைபெற்றது. இராணுவத்தின் சேவா வனிதா பிரிவின் அனுசரணையில் 15 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் இவ் வீடு, எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பயனாளியிடம் கையளிக்கப்படவுள்ளது. இந் நிகழ்வில் சர்வமத தலைவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி, கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






