"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் (CITIZENS MIRROR INDEX 1.0) தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக வெற்றி பெற்ற பிரதேச செயலகங்கள் இன்றைய தினம்(16.07.2026) மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், மாவட்ட ரீதியில் 14 பிரதேச செயலகங்கள் போட்டியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்து பிரதேச செயலக ரீதியாக தெரிவு செய்யப்பட்டமைக்காக முதலில் தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார். மேலும் உற்பத்தித்திறன் செயற்பாடுகளில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் சிறப்பாக செயற்பட்டு வருவதாகவும், அடுத்த 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டிகளில் பிரதேச செயலகங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து அடைவு மட்டத்தைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், உற்பத்தித்திறன் செயற்பாடுகள் பிரதேச செயலக ரீதியாக சிறப்பான தன்மையில் காணப்படுவதாகவும் ஒருங்கிணைந்த வகையிலே செயற்படுவதாகவும் அதற்கு வழிகாட்டலாக செயற்பட்ட பிரதேச செயலாளர்களுக்கும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கும் உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்தார். 2025 ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளை நல்லூர் பிரதேச செயலகம் பெற்றுக்கொண்டதுதாகவும், சிறந்த அரச அலுவலகத்திற்காக Merit Award மற்றும் அகில இலங்கை ரீதியாக சிறந்த சமூக வலைத்தளத்திற்கான (Facebook ) Special Jury Award ஆகிய இவ் இரண்டு விருதுகளையும், "மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்து நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். அதேபோன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் சுற்றாடல், சூழல் சார்ந்த, உற்பத்தி திறன் சார்ந்த போட்டிகளில் பங்கு பற்றி அடைவு மட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். அனைத்து பிரதேச செயலகங்களும் தொடர்ந்தும் போட்டிகளில் பங்கு பற்றி ஒருங்கிணைந்து செயற்படும்போது அதன் ஒட்டுமொத்த வெளிப்பாடும் மாவட்டத்தை வந்தடையும் எனவும் அதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார். அகில இலங்கை ரீதியாக 284 பிரதேச செயலகங்கள் போட்டிகளில் ஈடுபட்டு யாழ்ப்பாண மாவட்டம் மிகச்சிறந்த வெற்றியை தந்துள்ளமைக்கு பாராட்டுக்களை தெரிவித்ததுடன் மேலும் முழு மனதுடன் செயற்பட்டு வெற்றிகளை ஈட்ட வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.மேலும் வினைத்திறனான சேவைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டதுடன் அடுத்த 2026 ஆம் ஆண்டுக்கான உற்பத்தி திறன் செயற்பாட்டு மதிப்பீடுகளுக்கு உரிய செயற்பாடுகளை தயார் நிலையில் மேற்கொள்ளுமாறும் மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்களை கேட்டுக்கொண்டார்
"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் தேசிய, மாவட்ட ரீதியிலும் 96.23 புள்ளிகளையும் AAA தரத்தினையும் பெற்று நல்லூர் பிரதேச செயலகம் முதலாம் இடத்தினை பெற்றுக் கொண்டது. மாவட்ட ரீதியில் நல்லார் பிரதேச செயலகமும், 2 ஆம் இடத்தினை 87.17 புள்ளிகளையும் AAA தரத்தினை பெற்று கரவெட்டி பிரதேச செயலகமும், 3 ஆம் இடத்தில் 85. 97 புள்ளிகளையும் AAA தரத்தினை பெற்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேலும், புள்ளிகளின் அடிப்படையில் ஏனைய பிரதேச செயலகங்களுக்கு ம் சான்றிதழ் வழங்கப்பட்டன. "மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் 25 மாவட்டங்களில் மாவட்ட ரீதியாக பிரதேச செயலகங்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டம் 7 ஆம் இடத்தினைபெற்றுள்ளது. இந் நிகழ்வில் "மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக வெற்றி பெற்ற பிரதேச செயலகங்களுக்கு அரசாங்க அதிபர் அவர்களால் சான்றிதழ்கள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க.சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவி மற்றும் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உற்பத்தி திறன் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.






