இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36ஆவது தேசிய விளையாட்டுப் போட்டித் தொடரின் ஓர் அங்கமாக நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 25 மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், குறித்த போட்டித் தொடரை வெற்றிகரமாக நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வட மாகாணப் பணிப்பாளர் திரு. K.D.C. காமினி அவர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (20.07.2026) பிற்பகல் 3.00 மணியளவில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். 25 மாவட்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில், பெண்களுக்கான போட்டிகள் பாசையூர் சென் அன்ரனீஸ் விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கான போட்டிகள் யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய மட்ட விளையாட்டுப் போட்டித் தொடரின் உதைபந்தாட்டப் போட்டிகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுவது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும் எனத் தெரிவித்தார். மேலும், இவ்வருட தேசிய கபடி போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அணி முதலாம் இடத்தையும், கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய உதைபந்தாட்டப் போட்டியில் பெண்கள் அணி முதலாம் இடத்தையும், ஆண்கள் அணி மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தமையை நினைவுகூர்ந்த அவர், சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இப்போட்டி வீரர், வீராங்கனைகளுக்கு கூடுதல் உற்சாகத்தையும் சாதகமான சூழலையும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் உதைபந்தாட்டத்திற்கு புகழ்பெற்ற மாவட்டம் என்பதால் பெருமளவிலான பார்வையாளர்களின் ஆதரவு கிடைக்கும் என்றும், சுமார் 1,200 பேர் பங்கேற்கவுள்ள இப்போட்டித் தொடரின் மூலம் மாவட்டத்தின் பொருளாதார மற்றும் சேவைத் துறைகளுக்கும் பயன் ஏற்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், பிரதேச செயலாளர்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் இப்போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் என உறுதியளித்த அவர், யாழ்ப்பாண மாவட்ட அணியினருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி வினோதினி சிறிமேனன், விளையாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி திரு. H.W. சுஜிவ் உதயகுமார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் விளையாட்டுப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6