அமரர் வயலின் வித்துவான் பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணா அவர்களின் நினைவாக, அவரின் பெயரில் வீதிக்கு பெயர் சூட்டும் நிகழ்வும் நினைவுரை நிகழ்வும் இன்று (23.07.2026) வியாழக்கிழமை காலை 09.30 மணிக்கு, சுன்னாகம் மருதனார்மடத்தில் அமைந்துள்ள வட இலங்கை சங்கீத சபைக்கு முன்பாக சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி அவர்கள் கலந்துகொண்டார். சிறப்பு அதிதிகளாக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதுவர் கௌரவ ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வயலின் வித்துவான் லக்ஷ்மிநாராயணா வீதி எனப் பெயரிடப்பட்ட பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து வட இலங்கை சங்கீத சபை மண்டபத்திற்கு புதிதாக பெயரிடப்பட்ட வீதியிலிருந்து அதிதிகள் இன்னிசை அணிவகுப்புடன் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரி மாணவர்களின் வரவேற்பு நடனம் இடம் பெற்றது. தொடர்ந்து வடக்கு மாகாண பண்பாட்டுத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் திருமதி தர்சினி வரவேற்புரையையும், உடுவில் பிரதேச செயலாளர் திருமதி பொ. பிறேமினி அறிமுக உரையையும் நிகழ்த்தினர். நிகழ்வின் சிறப்பாக இராமநாதன் நுண்கலைப்பீட மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து, கௌரவ அமைச்சர் மற்றும் சிறப்பு அதிதிகள் உரையாற்றி, பேராசிரியர் வி. லக்ஷ்மிநாராயணா அவர்களின் இசைப் பங்களிப்புகளையும் பண்பாட்டு மரபிற்கான சேவையையும் பாராட்டினர். இந் நிகழ்வின் நிறைவாக, அன்னாரின் புதல்வரும் உலகப் புகழ்பெற்ற வயலின் வித்துவான் டாக்டர் ல. சுப்பிரமணியம் அவர்கள் ஏற்புரையாற்றினார். இந் நிகழ்வில் மதத் தலைவர்கள் வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், அரச அதிகாரிகள், கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.