யாழ்ப்பாண மாவட்ட உணவுப் பாதுகாப்புக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2025) மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் உணவு உற்பத்தியை மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டார். மாவட்டத்தின் வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தி, போசாக்கும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், விவசாயத் திணைக்களமும் பிரதேச செயலாளர்களும் இணைந்து உணவு உற்பத்தி தொடர்பான பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதோடு, அவற்றுக்கான முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாமல் காணப்படும் காணிகளை பிரதேச செயலாளர்கள் ஊடாக அடையாளம் கண்டு, அவற்றை பயிர்ச் செய்கைக்காக குத்தகை அடிப்படையில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. முதற்கட்டமாக கோப்பாய், உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுகளில் இந்தத் திட்டம் பரீட்சார்த்தமாக அமுல்படுத்தப்படவுள்ளது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தால் மாவட்டத்திற்கான மூன்று ஆண்டுகால உணவுப் பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்டாக்காலி கால்நடைகளைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ளூராட்சி அமைப்புகளும் பிரதேச சபைகளும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதனுடன், பிரதேச செயலக மட்ட விவசாயக் குழுக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள், எதிர்வரும் எல்-நினோ காலநிலையை முன்னிட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆலோசனைகள், வீட்டு தோட்டங்களை ஊக்குவிக்கும் திட்டங்கள் மற்றும் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் தரமான விதைநெல் உற்பத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சிவகுமாரன், மாவட்ட புள்ளிவிபரத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம். வித்தியானந்தநேசன், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், விவசாயம், மீன்பிடி, கால்நடை உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 4 6 8